Pages

Friday, December 10, 2010

தியாகியை அவமதிக்கலாமா?




குரோம்பேட்டை பாரதி புரத்தில் மூடப்பட்டுள்ள பரலி சு.நெல்லையப்பர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருநெல்வேலிக்கு அருகே பரலிக்கோட்டை என்ற சிற்றூரில் 1889-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி பிறந்த பரலி சு. நெல்லையப்பர் (உள்படம்), வ.உ.சி., பாரதியார், வ.வே.சு. ஐயர் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போரில் தீவிரமாக பங்கேற்றார். இதனால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.


தம்பி எனப் பாரதியாரால் அழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பர், எளிய தமிழில் எழுதும் ஆற்றல் கொண்டவர். சிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்து, தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். பாரதியின் பல படைப்புகளைச் சிறு நூல்களாக அச்சிட்டு மக்களிடையே கொண்டு சென்றார். சென்னை குரோம்பேட்டை பாரதி புரத்தில் வாழ்ந்து வந்த நெல்லையப்பர் 1971-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி காலமானார்.


தன்னுடைய மறைவுக்கு பிறகு தான் வாழ்ந்த இடத்தில் பள்ளி தொடங்க வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்தார். அந்த இடத்தை தானமாக பெற்று அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.


பல்லாவரம் நகராட்சி யாக அந்த பகுதி மாறிய போது, அந்தப்பள்ளி நகராட்சியிடம் ஒப்படைக் கப்பட்டது. அப்பள்ளிக்கு பரலி சு.நெல்லையப்பர் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பள்ளியால் பாரதிபுரம், ராதாநகர், புருஷோத்தமன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைந்தனர்.


இப்பகுதியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் காரணமாகவும், நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தாதன் காரணமாகவும் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதனைக்காரணம் காட்டி 2003ம் ஆண்டு பள்ளி மூடப்பட்டது. அன்று முதல் பள்ளி பூட்டியே கிடக்கிறது.


பரலி சு.நெல்லையப்பர் என்ற தியாகி வாழ்ந்த அந்த இடம் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாகவும், கழிப்பிடமாகவும் மாறி உள்ளது. இந்தப் பள்ளி மூடப்பட்டுள்ள தால், ஏழை எளிய குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு பள்ளியை நோக்கிச் செல்கின்றனர்.


ஆகவே, இந்தப்பள்ளியை திறக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து நகராட்சியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.நரசிம்மன் பல முறை நகர்மன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளார். ஆனாலும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.


அந்தப்பள்ளியை மீண் டும் பள்ளியாக தொடர்ந்து நடதுவதுதான்  விடுதலைப் போராட்ட தியாகிக்கு அளிக்கும் மரியாதையாகவும், மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இக்கும். இந்தப்பள்ளியை தொடர்ந்து நடத்த நகராட்சியும், தமிழக அரசும் முன்வருமா?

அரசு வீடு, மனைகள் ஒதுக்கீடு நீதி விசாரணைக்கு உத்தரவிடுக: சிபிஎம்

அரசு வீடு, மனைகள் ஒதுக்கீடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தர விட வேண்டுமென மார்க்சிட் கம்யூனிட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான வீடுகள், மனை கள் ஆகியவற்றை அரசு விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசு விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டி யலும் வெளியாகியுள்ளன.


அரசு விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு பெற்றவர்களில் பலர் வசதி படைத்தவர்களாக இருப்பதும், ஏற்கெனவே வீடுகள், மனைகள் உள்ளவர்களாகவும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. வீடு கள் ஒதுக்கீட்டை பெற்றுள்ளவர்களின் தகுதி மற்றும் வீடுகள், மனை களுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள விலைகள் குறித்தும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முழு உண்மையையும் கண்டறிய முறையான விசாரணை தேவை என மார்க்சிட் கட்சி கருதுகிறது.


வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள், மனைகள் ஒதுக்கீட்டில் முறை கேடு நடந்துள்ளது பற்றி குறிப்பிடுகிறபோது, வாரியத்தின் வீடுகளை வாடகைக்கு விடுவதையும் இத்துடன் முதல்வர் இணைப்பது சரியான அணுகுமுறையல்ல. எனவே, வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள், மனை கள் எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத் தரவிட வேண்டும் என மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயற்குழு, தமிழக அரசை வலியுறுத்துகிறது.

வீட்டு வசதி ஊழல்

எம்எல்ஏ, எம்எல்ஏவின் மனைவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், முதல்வரின் உதவியாளர், செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, கட்சிப் பிரமுகர், கலைஞர் டிவி ஊழியர் ஆகியோருக்கு முறைகேடாக ஒதுக்கீடு


தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனை, வீடுகள் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்  மூலம் இந்த முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துள்ளது.


வீட்டுவசதி வாரியத்தில் உள்ள மனை, வீடுகளில் 15விழுக்காடு வரை அரசு விருப்புரிமை அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்யலாம். இந்த ஒதுக்கீடானது விதவைகள், சமூக சேவகர், சமூகத்தில் பிரபலமானவர்கள் பொது நிர்வாகம், சுதந்திரப்போராட்ட வீரர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். ஒதுக்கீடு பெறுகிறவர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ சொந்த வீடு இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.


ஆனால், வாரிய நடைமுறை விதிகளை மீறி முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை பெற்றுள்ளவர்கள் யாரும் ஏழை எளிய மக்கள் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

இவற்றில் சில...


வீடு இருந்தும் மீண்டும் ஒதுக்கீடு பெற்றவர்கள் அரசியல்வாதிகள் டி.யசோதா எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவரான டி.யசோதா, 2006 சட்டமன்ற தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் சமர்ப்பித்த சொத்துக் கணக்கில் 11லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு (எண் 106ஏ, வெள்ளாளத் தெரு, கோடம்பாக்கம், சென்னை) உள்ளதாக கூறியிருக்கிறார். இவருக்கு சமூக சேவகர் என்ற அடிப்படையில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 59.56லட்சம் மதிப்புள்ள மனை (ஏ5) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு சென்னை மாநகராட்சியின் 89வது வட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் பி.என்.வனஜா, சட்டமன்ற உறுப்பினரான டி.யசோதாவிற்கு சமூக சேவகர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார், அதை வாரியமும் ஏற்றுக் கொண்டுள்ளது.


எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமோ, அமைப்போ, தாசில்தாரோ, கவுன்சிலரோ, சட்டமன்ற உறுப்பினரோ யாருக்கும் சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினாலும் அதனை அரசு ஏற்றுக் கொள்ளாது.


எஸ்.ராஜலட்சுமி: திமுக சட்டமன்ற கட்சி கொறடா அர.சக்கரபாணியின் (ஒட்டன்சத்திரம் தொகுதி) மனைவி எஸ்.ராஜலட்சுமி. இவருக்கு ரோட்டரி கிளப் சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. சமூக சேவகர் என்ற அடிப்படையில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர் வருவாய் பிரிவில், 79.86லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை (எண் 1047)  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2006 சட்டமன்ற தேர்தலில் அர.சக்கரபாணி போட்டியிட்டபோது தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த சொத்துக் கணக்கில், தனது சொந்த கிராமமான கள்ளிமந்தையத்தில் 12லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், தனது மனைவி ராஜலட்சுமிக்கு ஒட்டன்சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 4.50லட்சம் மதிப்புள்ள வீடும் உள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே வீடு உள்ளவருக்கு வாரியம் ஒதுக்கீடு செய்தது எப்படி? எல்.கணேசன்: மதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எல்.கணேசன் 2009 மார்ச் மாதம் திமுகவில் இணைந்தார். ஆனால் இவருக்கு 7.3.2008 அன்று முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 79.86லட்சம் ரூபாய் மதிப்புள்ள மனை (எண்.1052) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இவர் தாக்கல் செய்த சொத்துக்கணக்கில் 12லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி இவருக்கும் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



பி.மூர்த்தி எம்எல்ஏ: சோழவந்தான் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி. 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று கூறியிருக்கிறார். இவருக்கு உயர் வருவாய் பிரிவின் கீழ் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 72.8லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு (ஈ2/6) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் சமூக சேவகர் என்று லயன்ஸ் கிளப் சான்றிதழ் வழங்கியுள்ளது.


பிருந்தா நெடுஞ்செழியன், என்.சூர்யா: வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் மூத்த மருமகள் பிருந்தா நெடுஞ்செழியன். இவரது மகள் மருத்துவர் என்.சூரியா.


பிருந்தா நெடுஞ்செழியனுக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 23.4.08 அன்று உயர் வருவாய் பிரிவில் 9.82லட்சம் ரூபாய் மதிப்பிலான 983சதுர அடி பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு (பி3/14) ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் 2007ம் ஆண்டு வருமான வரி கட்டிய விவரங்களில் இருந்து சொந்த வீடு இருப்பது தெரியவருகிறது. என். சூர்யா என்சிசி, கண்சிகிச்சை முகாம், ரத்ததான முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டும், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வரும் சமூக சேவகர் என்று சேலம் வட்டாட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இவருக்கும் பிருந்தா நெடுஞ்செழியனுக்கு வீடு ஒதுக்கப்பட்ட அதே நாளில்,அதே பிளாட்டில் (பி 3/13) 9லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடுகளும் தற்போது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வட்டாட்சியருக்கு சமூக சேவகர் என்று சான்று அளிக்க அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கையில் அவர் எப்படி சமூக சேவகர் என்று சான்றிதழ் வழங்கினார்? ஏற்கெனவே சொந்த வீடு வைத்துள்ள பிருந்தாவிற்கு வீடு ஒதுக்கப்பட்டது எப்படி? முகாம்களில் கலந்து கொள்வதாலேயே ஒருவர் சமூக சேவகராக ஏற்றுக் கொள்ள முடியுமா? சொந்த பயன்பாட்டிற்கு வீட்டை வாங்கி விட்டு வாடகை விட்டு வருமானாம் பார்ப்பது சரியா?

திமுக பிரமுகர்கள்

பூச்சி எஸ்.முருகன்: திமுக பிரமுகரான இவர் வீட்டுவசதி வாரிய தொமுச நிர்வாகியாக உள்ளார். பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்ஐஜி (ஐ-1)பிரிவின் கீழ் வீடு பெற்றுள்ளார். இவருக்கு, விதிமுறைகளை மீறி மீண்டும் திருவான்மியூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் (ஏ-11) 58.61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2422சதுர அடி பரப்பளவு கொண்ட மனை ஒதுக்கப்பட்டுள்ளது.


வித்யா: முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியான மருதவிநாயகத்தின் மகளான வித்யாவுக்கு, சமூக சேவகர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு (பி3/14) ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 9.82லட்சம் ரூபாய். இவர் சமூக சேவகர் என்று அரிமா சங்க கூட்டமைப்பு சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார்.


முரளிதரன்: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றும் முரளிதரன் முகபேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கும் இடத்தில் 35.26லட்சம் மதிப்பிலான மனையை (எண் 1062) ஒதுக்கீடு பெற்றுள்ளார். லயன்ஸ் கிளப் கொடுத்த சமூக சேவகர் என்ற சான்றிதழை கொடுத்து ஒதுக்கீடு பெற்றுள்ளார்.


இளமுகில்: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் ஐடி-மேனேஜராக பணியாற்றுபவர். இவர் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கும் இடத்தில் 35.10லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (எண்: 1060) ஒதுக்கீடாக பெற்றுள்ளார்.


இளந்தென்றல்: இவர் முள்ளிமாநகர் மீனவ பஞ்சாயத்து சபையிடமிருந்து சமூக சேவகர் சான்றிதழ் பெற்று, அதனை கொடுத்து முகப்பேர் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் 7.04லட்சம் மதிப்புள்ள வீட்டை (இ2/10) ஒதுக்கீடாக பெற்றுள்ளார். இவர் இளமுகிலின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


கே.அன்பு: கலைஞர் டிவி-யில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறவர். ஸ்ரீ அபி பாஞ்சாலி யோக சங்கத்தில் இருந்து சமூக சேவகர் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்துள்ளார். இவருக்கும் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர் வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் 9.55லட்சம் மதிப்பிலான வீடு (பி3/16) ஒதுக்கீடு பெற்றுள்ளார்.


தீபா: முதலமைச்சரின் தனிச்செயலாளர் தேவராஜனின் மகளான சமூக சேவகர் என்ற பெயரில், திருவான்மியூர் காமராஜ் நகரில் 1.08கோடி மதிப்புள்ள 4466சதுர அடி பரப்பு கொண்ட மனையை (எண் 543) ஒதுக்கீடாக பெற்றுள்ளார்.


ஜெயசுதா: நக்கீரன் வார ஏட்டின் இணை ஆசிரியர் காமராஜின் மனைவி ஜெயசுதா. வீட்டோடு இருக்கும் இவருக்கு சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் அரசு விருப்புரிமை அடிப்படையில் திருவான்மியூர் புறநகர் திட்டம், காமராஜ் நகரில் 4764சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.1.15கோடி மதிப்பிலான நிலம் ஒதுக்கீடு பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்

ஜபார்சேட் ஐபிஎஸ்: தமிழக காவல்துறையின் உளவுத்துறை தலைவராக பணியாற்றி வருபவர். இவர் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவில் திருவான்மியூர் காமராஜர் நகரில் 1.15கோடி ரூபாய் மதிப்பிலான 4,756சதுரஅடி மனை (எண் 540) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2008 ஜூன் 6ம் தேதி இந்த சொத்தை படித்துக் கொண்டிருக்கும் தனது மகள் ஜெனிபர் பெயருக்கு மாற்றுகிறார். மாணவி ஜெனிபர் ரூ.46.03லட்சம், ரூ.1.73லட்சம், 2009 பிப்ரவரி மாதம் ரூ.60லட்சம் என தவணை செலுத்தினார். மனையின் மொத்த தொகையான ஒருகோடியே ஏழு லட்சம் ரூபாய் செலுத்திய பின்னர் அந்த சொத்து ஜெனிபரின் தாயாரான பர்வீன் ஜாபர் பெயருக்கு மாற்றப்படுகிறது.


இதில் சுவாரசியமான விஷயம் என்றால், பர்வீனும் இந்த மனைக்கான முழுத்தொகையை மீண்டும் செலுத்துகிறார். 2009 அக்டோபர் மாதம் ரூ.50.64லட்சத்தையும், நவம்பர் மாதம் ரூ.25லட்சத்தையும் செலுத்துகிறார். மேலும் செலுத்த வேண்டிய 51.5லட்சம் ரூபாயை அதே மாதத்தில் செலுத்தினார்.


வரி ஏய்ப்பு செய்வதற்காக ஜாபர் சேட் குடும்பம் மீண்டும்மீண்டும் பணத்தை செலுத்தியாக கணக்கு காட்ட இவ்வாறு செய்துள்ளார்கள். காரணம் ஜாபர்சேட்டின் மகள் ஜெனிபருக்கு இவ்வளவு வருமானம் எப்படி வந்தது என்ற கேள்வி எழக்கூடும். இதன்பின்னர் ஜெனிபர் செலுத்திய மொத்த தொகையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அவரிடமே திருப்பி கொடுத்துவிடுகிறது.


துர்கா சங்கர்: முதல்வரின் செயலாளராக உள்ள ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர். தொழிலாதிபரான இவர் சமூக சேவகர் பிரிவின் கீழ், ஜாபர் சேட் மனைக்கு அருகே 1.12கோடி ரூபாய் மதிப்புள்ள 2450சதுர அடி மனை (எண்: 538) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


ஜாபர் சேட் மனைவி பர்வீனும், துர்கா சங்கரும் சொந்த பயன்பாட்டிற்கு வீடு கட்ட ஒதுக்கீடு பெற்றவர்கள், தற்போது இருவரும் சேர்ந்து மனை எண் 538 மற்றும் 540ஐ இணைத்து 12வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளனர். ஒரு குடியிருப்பின் மதிப்பு சுமார் 1.5கோடி ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது. இருதரப்பும் சேர்ந்து ரூ.2.85கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு பெற்று 18கோடி ரூபாய் லாபம் அடைகின்றனர்.


கோ.பிரகாஷ் ஐஏஎஸ்: 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அப்பழுக்கற்ற அரசு ஊழியர் பிரிவின் கீழ் திருவான்மியூர் விரிவாக்கம், திருவள்ளுவர் நகரில் 76.58லட்சம் ரூபாய் மதிப்பிலான 3829சதுர அடி பரப்பளவு கொண்ட மனை (எண்: எஸ்-6) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் தனக்கு தானே அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்து முறைகேடாக ஒதுக்கீடுப் பெற்றுள்ளார்.


ஒரு அரசு ஊழியர் 25வருடம் பணியாற்றி ஊழல் கறை படியாமல், தண்டனை பெறாமல் இருந்தால், அவருக்கு அரசே 500ரூபாய் மதிப்புள்ள கிசான் விகாஸ் பத்திரம் வழங்கி அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்று வழங்கும். அதுதான் செல்லும். இதை தெரிந்திருந்தும் ஒரு மாவட்ட ஆட்சியரே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.


சி.கே.கரியாலி ஐஏஎஸ்: ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் கரியாலி திருவான்மியூர் விரிவாக்கப்பகுதியில் 1.20கோடி மதிப்பில் 6023சதுர அடி பரப்பளவிலான மனை (எஸ்4) ஒதுககீடு பெற்றுள்ளார். இவரின் கணவர் டாக்டர் ராஜ்குமாருக்கு சென்னையில் வீடு உள்ளது. அதனை மறைத்துள்ளார்.


டாக்டர் ஜெ.ராதகிருஷ்ணன் ஐஏஎஸ்: 2008ல் தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளராக பணியாற்றிய இவர், தான் அப்பழுக்கற்ற ஊழியர் என்ற பிரிவின் கீழ் திருவான்மியூரில் 59.29லட்சம் ரூபாய் மதிப்பிலான மனையை (எண் ஏ-20) பெற்றுள்ளார். ஆனால் தமிழக அரசு இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற சான்றிதழை வழங்கவில்லை.


கோசலராமன் ஐஏஎஸ்: கோசலராமனுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற அடிப்படையில் அரசு விருப்புரிமையில், திருவான்மியூர் புறநகர்த் திட்டம் உயர் வருவாய்ப் பிரிவில் 65.76லட்சம் மதிப்பிலான  3288சதுர அடி பரப்பளவு கொண்ட மனை ( ஏ-5) ஒதுக்கப்பட்டுள்ளது. இவருக்கும் அரசு அத்தகைய சான்றிதழை வழங்கவில்லை.


தகவல் உரிமை சட்ட ஆர்வலரான வி.கோபாலகிருஷ்ணன் தமிழக அரசின் கூடுதல்  செயலாளர் எஸ்.சாலமனிடம், யார் யாருக்கு எந்தெந்த அடிப்படையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள், அவர்களின் விவரத்தை தருமாறு விண்ணப்பித்திருந்தார். அதற்கு பதிலளித்த சாலமன், யாருக்கும் அப்படி சான்றிதழே வழங்காத நிலையில், பட்டியல் தர இயலாது என்று கூறியுள்ளார். ஆக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொடுத்துள்ளது பொய்யான சான்றிதழ் என்று புரிந்து கொள்ள முடிகிறது.


மக்கள் தொடர்பு அதிகாரிகள்
கே.நித்தியானந்தன்: முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து தற்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சமூக சேவகர் என்ற பிரிவில் திருவான்மியூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 50.82லட்சம் மதிப்புள்ள (2100சஅ) மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருடைய அதிகப்பட்ச சம்பளம் 20ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்காது. ஆனால் மாதமாதம் 76.500 ரூபாய் தவணை தொகை செலுத்தும் வகையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எப்படி சரியாகும்?


கே.மாறன்: முதலமைச்சரின் அலுவலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரியான இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர்வருவாய் பிரிவினர் வசிக்கும் இடத்தில் ரூ. 9.45லட்சம் மதிப்பிலான குடியிருப்பு (பி3/12) ஒதுக்கப்பட்டுள்ளது. பால.சக்திதாசன்: முதலமைச்சரின் அலுவலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி. இவருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உயர்வருவாய் பிரிவினர் வசிக்கும் பகுதியில் ரூ.9.75லட்சம் மதிப்பிலான குடியிருப்பு (பி3/11) ஒதுக்கி பெற்றுள்ளார்.


கே.மாறனுக்கும், பால.சக்திதாசனுக்கும் முதலமைச்சரின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.வெங்கட்ராமனிடம் இருந்து சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்துள்ளார். அவரும் கொடுத்துள்ளார். இந்த சான்றிதழை ஏற்று வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.


ஜெ.நவீன் இப்ராஹிம்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜாபர் அலியின் மகனான இவர் லயன்ஸ் கிளப் வழங்கியசமூக சேவகர் சான்றிதழ் கொடுத்து முகப்பேர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர்வருவாய் பிரிவின் கீழ் 65லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (ஏ1) ஒதுக்கீடு பெற்றுள்ளார். தமிழ்ப்பணி மற்றும் சமுதாயப்பணி மாமன்றம்: இந்த அமைப்பு சமூக சேவை செய்து வருவதாக கூறி முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உயர்வருவாய் பிரிவில் 43.19லட்சம் ரூபாய் மதிப்பிலான மனை (எண் 1046) ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.


இதேபோன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ரவிராஜபாண்டியன் உள்ளிட்டோரும் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.


ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், மாஸ் ஆக்ஷன் நெட்வொர்க், சராமிக் டிரஸ்ட், எக்ஸ்னோரா போன்ற அமைப்புகளிடமிருந்து எல்லாம் சமூக சேவகர் சான்றிதழ் பெற்று 300க்கும் மேற்பட்டோர் மனை ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தெரிகிறது.


ஏழை எளிய மக்களின் சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டிய வீடு, மனைகள் அதிகாரிகளின் கொள்ளைக்காடாக மாறியுள்ளது.


கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் முதலமைச்சர்கள் தங்களின் ரத்த உறவுகள், சொந்தக்கார்கள், கட்சிக்காரர்கள், வீட்டு வேலைக்காரர்கள், ஓட்டுநர்கள், அரசு அதிகாரிகள் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிலம், மனைகளை ஒதுக்கி கடும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டனர். மகாரஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் தனது பதவியையே இழந்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் கட்சியை மிரட்டி தப்பித்துக் கொண்டார். இதேபோன்று தமிழகத்திலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் தலைவர் முதலமைச்சர்தான். ஊழல்களை பற்றி அதிகம் பேசும்  முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

Monday, November 1, 2010

பன்னாட்டு நிறுவனங்களில் உச்சகட்ட சட்டமீறல்!

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் உச்சகட்ட சட்டமீறல்கள் நடந்து வருவதை இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் வன்மையாக கண்டித்துள்ளார்.
தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


நோக்கியா நிறுவனத்தில் பாதுகாப்பு விதிமீறல்கள் காரணமாக தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. 31.10.2010 அன்று நடந்த விபத்தில் அம்பிகா என்கிற பெண் கொடூரமாக மரணமடைந்துள்ளார். எந்திரத்தில் அகப்பட்ட பிறகு, எந்திரத்தின் சேதத்தைப்பற்றி கவலைப்படாமல் உடைத்திருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்க முடியும் என்று சக ஊழியர்கள் கண்ணீர் மல்க கூறுகிறார்கள். அதிகாரிகள் ஒரு உயிரின்மீது எவ்வளவு அக்கறையற்று கல்மனதோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான உதாரணம் இது.


தொழிற்சாலை ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள்? இதேபோல் பி.ஒய்.டி. (க்ஷரடைன லடிரச னுசநயஅள) என்ற எலக்ட்ரானிக் கம்பெனியில் 4 ஆயிரம் பேர் பணியாற்றினாலும் 800 பேர்தான் நிரந்தரத் தொழிலாளிகள். அத்தனை பேரும் நிரந்தர தன்மையுள்ள தொழிலில்தான் ஈடுபடுகிறார்கள். இங்கே பணிநிரந்தரச் சட்டம், கான்ட்ராக்ட் ஒழிப்புச்சட்டம் எல்லாம் காற்றில் பறக்கிறது.


இந்த நிறுவனத்தில் 12 மணி நேர ஷிப்ட்தான் ஆண்டுக்கணக்கில் அமலாகிறது.  இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது உச்சகட்ட சட்டமீறல். இதைத்தெரியாமல் அந்தப் பகுதியின் தொழிற்சாலை ஆய்வக அதிகாரி இருக்கவே முடியாது. இதைத் தெரிந்தும், அனுமதித்த அந்த அதிகாரிகள் பதவியில் தொடரக்கூடாது. அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் அரசின் நேர்மையை நம்ப முடியும். இந்த நிறுவனத்தில் உள்ள பெண்கள் மிகவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள்.


 இந்தத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க விரும்பியதற்காக கடுமையான பழிவாங்கலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பிரேம் என்கிற ஒரு தொழிலாளியை அதிகாரிகள் கடுமையாக மிரட்டியதால் மனம் உடைந்து ஒரு ரசாயனத்தைக் குடித்து 4 தினங்களுக்கு முன்னால் அவர் தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டார். சட்டத்தின் ஆட்சி என்பதின் பொருள்தான் என்ன? இதற்குக் காரணமான அந்த அதிகாரிகளைத் தண்டிக்காமல் விடக்கூடாது.


ஃபாக்கான் நிறுவனத்தில் 40 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தொ.மு.ச.உடன் செய்து கொண்ட இரு தரப்பு ஒப்பந்தத்தை எல்லோர் தலையிலும் திணிப்பதற்கு நிர்வாகம்  மிரட்டல்களில் ஈடுபடுகிறது.  தொழிலாளர் துறை நடுநிலையோடு நடக்க வேண்டும்.  பெரும்பான்மையைத் தீர்மானிக்க  ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்று நிர்வாகமே கடிதம் கொடுத்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் சிஐடியு வெற்றிபெறும் என்பதால் தொழிலாளர் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.


 உயர்நீதிமன்றம் இதுகுறித்து நோட்டீ அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் பதிலளித்து நீதிமன்ற தீர்ப்பிற்காவது தொழிலாளர் துறையும் நிர்வாகமும் கட்டுப்பட வேண்டும். ஹுண்டாய், ஃபோர்டு, லூமாக், ஹவாசின், சான்மினா போன்ற ஏராளமான நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிற்சங்க அங்கீகாரச்சட்டம் அவசியம். வரும் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவை அரசு சமர்ப்பிக்க வலியுறுத்துகிறோம்.

அண்டம் நடுநடுங்க... கண்டம் கிடுகிடுக்க...

பழைய காலத்தில் நடத் தப்பட்ட சத்தியவான் சாவித்ரி தெருக் கூத்து நாடகத்தில் எமன் என்ட்ரி ஆவதற்கு பின் னிரவு ஆகிவிடும். பெரும் பாலான மக்கள் தூங்கி வழிந் துக் கொண்டிருப்பார்கள். எமன் வருகையை முன்னறி விக்கவும், தூங்கும் மக்களை எழுப்பி விடவும் கட்டியங் காரன் பெரும் குரலெடுத்து அண்டம் நடுநடுங்க, கண் டம் கிடுகிடுக்க.... ராஜா வந்தாரே... எமதர்ம ராஜா வந்தாரே... என்று பாடுவார். அதைத் தொடர்ந்து அட்டை எருமை சிரித்தபடி மாடு மீது அமர்ந்து, பாசக்க யிற்றை வீசியபடி பயங் கரமாக எமதர்ம ராஜா பிரசன்னமாவார்.


இப்போது அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகையையொட்டி நடை பெறுகிற அலப்பறைகளும், ஆர்ப்பரிப்பு களும் பழைய சத்தியவான் சாவித்ரி நாடக எம தர்பாரையே நினைவுபடுத்துகின்றன. மத்தியில் ஆளும் மன்மோகன்சிங் அரசு பயந்து நடுங்கியபடி பணிவிடைக்கான ஏற் பாடுகளை செய்து வருகிறது. உலக அதி சயமே நடைபெற போவதுபோல ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன. வெள்ளை மாளி கையிலிருந்து எழுந்து கறுப்பு இயேசுவே வர விருப்பது போல சில உள்ளூர் தலைவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.


ஒபாமா வருகையையொட்டி 40 விமா னங்களும், 6 குண்டு துளைக்காத கார்களும் வரவுள்ளனவாம். இந்தியாவில் நவம்பர் 6 முதல் ஒபாமா சுற்றுப் பயணம் செய்யும்போது 6 குண்டு துளைக்காத கார்களும் கூடவே செல்லுமாம். ஒரு ராணுவ விமானம் உள் ளிட்ட 40 விமானங்களும் வானில் வட்ட மடித்தபடியே இருக்குமாம். வெள்ளை மாளி கையோடு அவர் எப்போதும் தொடர்பில் இருக்குமாறு தனி தொலைத் தொடர்பு கட் டமைப்பும் உருவாக்கப்படுமாம்.


ஒபாமா மற்றும் அவரோடு வரும் பரி வாரத்திற்காக தாஜ்மகால் ஓட்டல் முழுமை யும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல் ஊழியர்கள் கூட கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுவார்களாம். தில்லி மற்றும் மும்பையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு சேட்டிலைட் மூலம் இரு நக ரங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படு மாம்.
பாதுகாப்பு பணியில் அமெரிக்கப் படை யினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு சேர்ந்து அமெரிக்கா விலிருந்து மோப்ப சக்தி மிகுந்த 30 நாய் களும் வருகைதர உள்ளன. நமது நாட்டி லுள்ள மோப்ப சக்திமிகுந்த நாய்களைக் கூட அவர்கள் நம்ப தயாராக இல்லை.


ஒபாமா தனது குடும்பத்தி னரோடு தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கவுள்ளார். இதற்காக இப்போதே கிட்டத்தட்ட தாஜ் மகால் அமெரிக்க போலீ சாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.


இந்தியாவிற்கு எத்த னையோ உலக நாடுகளின் தலைவர்கள் வருகிறார்கள்... போகிறார்கள்... உடன்பாடு களில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி வந்தால் மட்டும் பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது எலிசபெத் மகாராணி வந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ அத்தனையும் நடக் கிறது. முன்பொருமுறை அமெரிக்க ஜனாதி பதியாக இருந்த கிளிண்டன் இந்தியா வந் தார். அவரோடு அவரது மாமியாரும் வந் தார். மாமியார் தனது செல்ல நாய்க் குட்டி யையும் சேர்த்து அழைத்து வந்தார். அந்த நாய் குட்டிக்கு மட்டும் 8 போலீசார் இரவு பகலாக காவல்காத்தனர். இப்போது ஒபாமா வின் மாமியாரோ அல்லது அவர் வளர்க்கும் நாய்க் குட்டியோ வந்தால் போலீசார் பாடு திண்டாட்டம்தான்.


ஒபாமா ஒன்றும் இந்தியாவை சுற்றிப் பார்க்கவரவில்லை. இந்தியப் பொருளாதா ரத்தை சுற்றி வளைக்கத்தான் வருகிறார். சில் லறை வர்த்தகத்தை முற்றாக திறந்துவிட ஒபாமா வருகை உதவும் என்று வால்மார்ட் நிறுவனம் இப்போதே வாயைப் பிளக்கிறது. வங்கி, இன்சூரன் துறைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பது குறித்து விவாதிக்கப் படும் என்று நாக்கை நீட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்க நிதி நிறு வனங்கள்.


இந்த நயவஞ்சகத்தை மறைக்கத்தான் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து வண்டி வண் டியாக எழுதுகின்றன சில ஏடுகள். சிலரோ கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் வரு கையை கம்யூனிட்டுகள் எதிர்க்கலாமா என்று கேட்கின்றனர். கறுப்பின மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஒப்பற்ற தலைவன் நெல்சன் மண்டேலா வெஞ் சிறையில் வாடியபோது அவருக்கு ஆதர வாக தலைநகர் தில்லி துவங்கி குக்கிராமங் கள் வரை போராடியவர்கள் கம்யூனிட்டுகள். ஒபாமா கறுப்பா? வெள்ளையா என்பதல்ல இப்போதைய பிரச்சனை. ஒபாமா வருகை யின் உள்நோக்கம் என்ன என்பதே கேள்வி? சுரண்டலுக்கு நிறமில்லை.


- மதுக்கூர் இராமலிங்கம்

Friday, October 22, 2010

கழிப்பறைகளுக்கு மலச்சிக்கல்

சென்னை வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மாநகராட்சி; சுகாதாரத்தில் முன்னிலையில் உள்ளது என்று ஆட்சியாளர்கள் கூறினாலும் கழிப்பிடம் தேடி மக்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று தமிழக முதலமைச்சர் மூச்சுக்கு முன்னூறு முறை உதிர்த்தாலும், தளபதியின் ஆலோசனைக்கிணங்க இந்த அளப்பரிய சாதனையை மாநகராட்சி செய்கிறது என்று மேயர் உணர்ச்சி பொங்க கூறினாலும், பொது சுகாதாரத்தில் மாநகராட்சி பின்தங்கியே உள்ளது. இதுதான் நடைமுறை அனுபவம் உணர்த்துகிறது.

சென்னை மாநகரில் இலவச பொதுக்கழிப்பிடத்தை காண்பதே அரிதாக உள்ளது. ஆங்காங்கே ஒன்றிரண்டு பொதுக்கழிப்பிடங்கள் இருந்தாலும் அது ஆளும் கட்சியினரின் வசூல் வேட்டைக்கே பயன்படுகிறது. பொதுச்சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டிய மாநகராட்சி, மக்களின் நலனில், குறிப்பாக குடிசைபகுதி மக்களின் நலனில் அக்கறை இன்றி உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக சில கழிப்பிடங்கள் சாட்சிகளாக உள்ளன.

முதலமைச்சர் தொகுதியே இந்த லட்சணம் என்றால்?

சேப்பாக்கம் தொகுதி. முதலமைச்சரின் தொகுதி. பிற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தொகுதி. நிலைமை என்ன? 81வது வட்டம் சிந்தாதரிப்பேட்டை பம்பிங் டேசன் சாலை, ரிச்சி தெருவில் 300குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகம் எதிரில் நவீன பொதுக்கழிப்பிடம் உள்ளது. பெயர்தான் நவீனமே தவிர, கழிப்பிடம் கட்டி பல வருடங்களாகிறது. அந்த கழிப்பிடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல மாதங்களாகிறது.

கழிப்பிடத்தை பராமரிக்க ஊழியர்கள் இல்லை. உடைந்த கழிவு நீர் குழாய்களை சரி செய்ய மாநகராட்சிக்கு மனம் இல்லை. கழிப்பிடம் முற்றிலும் நாசமாகி விட்டது. ஆகவே, கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பூட்டியே கிடக்கும் அந்த கழிப்பிடத்தின் பெயர் பலகை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.

துணை முதலமைச்சர் திறந்தும் மூடியே கிடக்கும் கழிப்பிடம்

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 107வது வட்டம், நுங்கம்பாக்கம் மைதானத்தில் 5லட்சம் ரூபாய் செலவில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அதனை துணை முதலமைச்சர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்தும் வைத்தார். அன்றிலிருந்து அந்த கழிப்பிடத்தை பாதுகாப்பாக மாநகராட்சி பூட்டி வைத்துள்ளது.

இது தெரியாமல், மைதானத்திற்கு விளையாட வருகிறவர்கள் போக இடமின்றி கழிப்பிடத்தை உடைத்து பயன்படுத்தினர். பராமரிப்பு இல்லாததால் பயனற்று கிடக்கும் அந்த கழிப்பிடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இளைஞர்கள் பயனடைவார்கள். பெண்கள் கழிப்பிடத்தை யாரும் உடைக்கவில்லை என்பதுதான் இந்த கழிப்பிடத்தின் சிறப்பு.

பூச்சி கடித்தால் என்ன?

139வது வட்டம் ஜோதியம்மாள் நகரில் 75விழுக்காடு குடும்பங்களுக்கு கழிப்பிடம் இல்லை. இவர்களுக்காக 2002-2003ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பிடமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதுகாப்பாக மூடியே வைக்கப்பட்டுள்ளது.

கழிப்பிட வசதி இல்லாத மக்கள், அடையாற்று கரையும், புதர்மண்டிய மைதானமும் கழிப்பிடமாக இருந்து வருகிறது. அங்கு செல்லும் மக்கள் அவ்வப்போது பூச்சிகடிகளுக்கு உள்ளாகின்றனர்.

நடவடிக்கை?

இந்த கழிப்பிடங்களை திறக்கக்கோரி அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர். பத்திரிகைகளில் அவ்வப்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொகுதி குறித்து செய்தி வெளியிட்டால், மாநகராட்சி அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பது போன்று பாவலா காட்டுகிறது. இதுதான் சிறப்பாக செயல்படும் மாநகராட்சியின் லட்சனமாக உள்ளது.

ஒருவேளை அந்த பெரியவர்கள் அங்கு செல்லாததால் பூட்டி பாதுகாப்பாக வைத்துள்ளார்களோ? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மனிதனுக்கு மலச்சிக்கல் வந்தால் மருத்துவரிடம் செல்லலாம். கழிப்பிடத்திற்கு மலச்சிக்கல் வந்தால் மாநகராட்சிதானே சரி செய்ய வேண்டும்.

ஊழியர்களையும் கழிவாக கருதுகிறதோ?

சென்னை நகரத்தில் உள்ள பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்து, மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் அளப்பரிய செயலை செய்து வருபவர்கள் கழிவு நீர் அகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களை அரசு வெறும் கழிவாகவே நினைக்கிறதோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.



சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது என சட்டம் இருந்தாலும் நடைமுறையில் அமலாகாத நிலைதான் உள்ளது.


மழை, வெயில் என பொருட்படுத்தாமல் குடிநீர் விநியோகம், குடிநீர் பாராமரிப்பு, குடிநீர் இணைப்பு, குடிநீர் பழுதுபார்ப்பு, பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் என கடுமையாக உழைக்கின்றனர். இதனால் இளந்தொழிலாளர்கள் உடல் தோற்றம் மாறி, பல்வேறு விதமான நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 130ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது.


இவர்களுக்கு அடையாள அட்டை, பாதுகாப்பு சாதனங்கள், சம்பத்துடன் கூடிய விடுப்பு, பி.எப், இஎஸ்ஐ, சம்பளச்சீட்டு என எந்த சட்ட உரிமையையும் நிர்வாகம் வழங்காமல் உள்ளது; வேலை செய்வதற்கான எந்த அத்தாட்சியும் இல்லாமல், தொழிலாளர் என்ற சட்ட அங்கீகாரம் கூட இன்றி உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 300ரூபாய் கூலி வழங்க வேண்டும். 8மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். பண்டிகை, அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். சம்பளச்சீட்டு வழங்க வேண்டும்.


இலவச மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சீருடை, பணி செய்வதற்கான உபகரணங்களை வழங்க வேண்டும். பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைவருக்கும் போன, கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடினாலும் அரசு பாராபட்சமாகவே நடத்துகிறது.


தீபாவளி பண்டிகையையொட்டி அரசுத்துறை நிறுவனமான மின்சார வாரியம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் போன வழங்கி உள்ளது. அந்த அளவிற்கு கூட இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.
 
 
இந்த நிலை மாறுமா? இவர்களையும் தொழிலாளர்களாக நினைத்து அரசு போன வழங்குமா? இந்த தொழிலாளர்களுக்கு 12லட்சம் ரூபாய் செலவிட அரசு தயங்குவது ஏன்?

Thursday, September 16, 2010

தீயில் கருகிய குழந்தைகளுக்கு என்ன செய்தார்கள்?

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டானு ஒரு திரைப்பட காமெடி வரும். அதுபோல எவ்வளவு மிரட்டி கேட்டாலும் மனம் கோணம கொடுத்துடுறானுங்க-னு சொல்லும் அளவுக்கு தனியார் பள்ளி முதலாளிகளால் கட்டணக் கொள்ளை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முழுஅளவிலான சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் போராடின.

இந்த நெருக்கடியால் சமச்சீர்கல்வியையும், கட்டணத்தை முறைப்படுத்த கோவிந்தராஜன் தலைமையிலான ஒரு குழுவையும் அரசு அமைத்து. அந்தக்குழு தனியார் பள்ளிகளை தீர விசாரித்து, ஆராய்ந்து அதன் பிறகு கட்டணத்தை நிர்ணயித்தது. இந்த கட்டணமும் அதிகமாக உள்ளது என்று சகல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு நிர்ணயித்த கட்டணம் கட்டுபடியாகாது என்று கூறி தற்போதும் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வசூல் வேட்டையே நடத்தி வருகின்றன. இதற்கெதிராக ஆங்காங்க பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணம் போதுமானதாக இல்லையென்றால் பள்ளி நிர்வாகம் என்ன செய்திருக்க வேண்டும்?

அ. கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை தகவல் பலகையில் ஒட்டிவிட்டு, அதற்கு அருகில் இந்தக் கட்டணம் போதவில்லை. ஆகவே, இந்த வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நேர்மையாக எழுதி போட்டிருக்க்க வேண்டும்.

ஆ. பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்டி, கடந்த ஆண்டு இவ்வளவு செலவாகி உள்ளது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்தால், இவ்வளவு தொகை பற்றாக்குறை ஏற்படும். ஆகவே, பெற்றோர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

இ. அரசு நிர்ணயித்த கட்டணம் கட்டுபடியாகவில்லை என்றால் பள்ளியை அரசிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது இழுத்து மூடியிருக்க வேண்டும்.

கல்வி நிலையங்களை கோவிலாக நினைத்த பெற்றோர்கள் பள்ளிகள் வியாபார தலமாக மாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டு, பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை தற்காலிகமாக சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் நீதிமன்றங்கள் தனியார்மயத்திற்கு துணையாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அரசும் வாய்மூடி மவுனியாக தனியார் பள்ளி முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது.

டாமாக் ஊழியர்கள் போராடியபோது மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர், தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று கூற துணிவில்லாமல் போனது ஏன்? முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பள்ளிகள் நடத்தும் போது அவர் அப்படி கூற முடியாதுதான்.

இந்தநிலையில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை நடத்துவதை எதிர்த்து பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளி முன்பு போராட்டம் நடத்துவதை கண்டித்தும், போச்சம்பள்ளியில் உள்ள தனியார்பள்ளி மாணவர் சுரேஷ் விபத்தில் இறந்ததையடுத்து ஏற்பட்ட வன்முறையை கண்டித்தும் மாநிலம் முழுவதும் செப்.17அன்று தனியார் பள்ளிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

தனியார் பள்ளிகளின் வசூல் வெறியால் கும்பகோணத்தில் 100குழந்தைகள் நெருப்பில் வெந்து கருகிய போது இவர்கள் எந்த போராட்டத்தை நடத்தினார்கள். தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றவுடன் இந்த கல்விமான்களும், நியாயவான்களும் தெருவில் இறங்குகிறார்கள். இந்த போராட்டத்தில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

சமூகத்தில் யார் தங்கள் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினாலும் அடக்குமுறையை ஏவும் தமிழக அரசு, பள்ளிகளை மூடும் இவர்களை விட்டுவைப்பதன் மர்மம் என்ன?

Wednesday, September 15, 2010

விஷநீர் அருந்தும் மடிப்பாக்கம் மக்கள்

மடிப்பாக்கம் ஏரி விஷமாக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பருகும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.


சென்னை புறநகர் பகுதியான மடிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது மடிப்பாக்கம் ஏரி. 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது 56ஏக்கராக உள்ளது. மீனம்பாக்கம், நங்கநல்லூர், மூவரசன்பேட்டை, பழைய பல்லாவரம், கீழ்க்கட்டளை போன்ற பகுதிகளில் இருந்து ஏரிக்கு நீர் வருகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை ஏரிக்கு செல்கிறது. தென்மேற்கு பகுதியில் நீர்வெளியேறும் கால்வாய் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பல்லாவரம் நகராட்சி திட்டமிட்டது.  இதனால் ஏரி மாசுபடும் என்று குடியிருப்போர் நலச்சங்கங்கள் தடுத்து நிறுத்தின. நீர் வெளியேறும் கால்வாய் 40 அடியிலிருந்து 10அடியாக சுருங்கி விட்டது. வடகிழக்கு பகுதியும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.


இந்த ஏரியில்21 இடங்களில் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டு 24 நீர் தேக்க தொட்டிகள் மூலமாக ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஏரியை சுற்றி 1.41கோடி செலவில் 18அடி அகல சாலை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது.


ஏரி ஆக்கிரமிக்கப்படு வதையும், நீர் மாசுபடுவதை தடுக்கவும் 2008ம் ஆண்டு 12லட்சம் ரூபாய் செலவில் ஏரியை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கரையோரம் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த வேலிகள் முற்றிலுமாக சிதைந்து விட்டன.


மடிப்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள சபரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மழை நீர் கால்வாயாக கட்டப்படுகிறது. கழிவு நீர்கால்வாய் தனியாக இல்லாததால், அப்பகுதி மக்கள் மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுகின்றனர். மேலும் வேறுசில தெருக்களில் இருந்து வரும் கழிவு நீரும் இந்த மழைநீர் கால்வாயில் கலக்கிறது. மழைநீர் கால்வாய் என்ற பெயரில் கழிவு நீரை ஏரிக்குள் விட திட்டமிட்டனர். ஏரியை அப்பட்டமாக மாசுபடுத்தும் இந்த முயற்சியை அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தடுத்து நிறுத்தி உள்ளன.

ஏரியை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், ஏரியில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், அந்த அறிவிப்பு பலகையின் கீழே பழைய பல்லாவரத்தில் இருந்து வரும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது.


இதுதொடர்பாக ஏரிக்கு அருகே உள்ள மடிப்பாக்கம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் அன்பழகன் கூறுகையில், பல்லாவரம் நகராட்சியில் மடிப்பாக்கம் ஏரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீரை விடுகின்றனர். இதனால் ஏரி விஷமாக மாறி வருகிறது. இந்த நீரை பருகும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின் றன. இதனை தடுக்க வேண் டிய தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. ஊராட்சியில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லை. ஆகவே பாதாள சாக்கடை அமைப்பதன் மூலமே ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியும். என்கிறார்.


மக்கள் மன்றம் அமைப் பின் அமைப்பாளர் நெ. இல.சீதரன் கூறுகையில், ஏரியை பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைபாதையும் அமைக்க வில்லை, பூங்காவையும் அமைக்க வில்லை. அமைக்கப்பட்ட வேலியும் உடைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், 2007ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதலமைச்சர் மடிப்பாக்கம் ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும் என்றார். ஆனால் இதுவரை அதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார். 
 
 
ஏரி மாசுபடுவதை தடுக்க 25.03.2010 அன்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக் கொடுத்தும் பணிகள் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் சீதரன் கூறினார்.

Tuesday, September 14, 2010

துணைமுதல்வர் தொகுதியில் சிறுநீர் சட்டி சுமக்கும் அவலம்

முன்பெல்லம் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு ஒரு சட்டி கொடுப்பார்கள். அதில்தான் மலமும் சிறுநீரும் கழிக்க வேண்டும். பின்பு அதனை தலையில் தூக்கிச் சென்று கொட்டிவிட்டு வரவேண்டும். அந்த சட்டியோடுதான் இருக்க வேண்டும். அந்த நிலை தற்போதுள்ள சிறைகளில் இல்லை. ஆனால் சென்னை நகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இன்றும் சிறுநீர் சட்டியை சுமக்கும் நிலை உள்ளது. அதுவும் ஆளும் கட்சியான திமுக அலுவலத்திற்கு அருகில், துணை முதலமைச்சரின் ஆயிரம்விளக்கு தொகுதியில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.




1970களில் தேனாம்பேட்டை வெங்கட்ராமன் தெரு குடிசையில் இருந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுப்பதாக அரசு அறிவித்தது. குடியிருப்பு கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக எல்டாம் சாலை ராமலிங்கேவரர் கோவில் அருகே இருந்த காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருக்க அனுமதித்தனர். வீடுகள் கட்டிய பிறகு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆகையால் அந்த மக்கள் அங்கேயே வசித்து வருகின்றனர்.



115வது வட்டத்திற்கு உட்பட்ட இந்த ராமலிங்கேவரர் கோவில் குடிசைபகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள இங்குள்ள மக்கள் வசிக்கும் குடிசை பெரும்பாலும் 80சதுரஅடி அகலம் கொண்டவைதான். இங்குள்ள எந்த குடிசையிலும் கழிப்பிட வசதி இல்லை. இந்தப்பகுதியில் கழிப்பிடம், பாதாள சாக்கடை, குடிநீர்வசதி என எந்த வசதியையும் மாநகராட்சி செய்து கொடுக்காமல் உள்ளது.


ஆகவே, மலம் கழிக்க அரைகிலோமீட்டர் தூரத்தில் உள்ள 113வது வட்டம் போய தெரு பொதுக் கழிப்பிடத்திற்கு செல்கின்றனர். அந்த கழிப்பிடமும் திமுக பிரமுகர் ஒருவரின் வசூல் வேட்டைக்கு உள்ளாகி உள்ளது. அந்த கழிப்பிடத்தையும் காலை 10மணிக்கே மூடிவிட்டு சென்று விடுகிறார்.


கழிப்பிட வசதி இல்லாததால், வீட்டில் உள்ள பக்கெட்டுகளில் சிறுநீர் மற்றும் கழிவு நீரை பிடித்துவந்து பிரதானசாலையில் உள்ள பாதாள சாக்கடையில் ஊற்றிவிட்டு செல்கின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ப சிறைகள் மாறியிருக்கின்றன. ஏழை உழைப்பாளி மக்கள் இன்றும் சிறுநீரை சுமக்கும் கொடுமை இங்கு தொடர்கிறது.


நூறு ரூபாய் செலுத்தினால் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்ததைதொடர்ந்து இப்பகுதியில் உள்ள சிலர் பணம் கட்டினர். ஆனால் இதுவரை இணைப்பு வழங்காமல் உள்ளனர்.



இந்த பகுதி மக்களுக்கு குழாய் அல்லது தொட்டி மூலமாக குடிநீர் வழங்காமல் உள்ளனர். இதனால் எல்டாம் சாலையில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அடித்து எடுத்து செல்கின்றனர். பட்டாக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பட்டா கிடைத்தபாடில்லை.



இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதி மக்கள் 1999ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அதன்பின்னரும் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.



அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி 8வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் 115வது வட்டகிளை செயலாளர் மோகனரங்கன் கூறியுள்ளார்.




இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலை பகுதி பொருளாளர் ரவி கூறுகையில்,இந்த பகுதியின் நுழைவு வாயிலில் திரௌபதி அம்மன் கோவில், பெருமாள் கோவில், ஆஞ்நேயர் கோவில் இருந்தாலும் இந்த மக்களுக்கு அருள் கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களை 25கிமீ தூரத்தில் உள்ள செம்மஞ்சேரிக்கு துரத்திவிட்டு இந்த இடத்தை திமுகவினர் சிலர் அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். அதற்காக எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் உள்ளனர். என்றார்



சூத்திரன் ஆட்சியில் பிரதான சாலைகளில் மட்டும் ஜொலித்தால் போதாது.ஏழை எளிய மக்களின் வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டாமா? மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் எல்லா வசதி வாய்ப்புக்களையும் பெற்று வாழ்ந்திட தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றையும் அளிப்பதே அரசின் குறிக்கோள் என்று முதலமைச்சர் பேசினால் மட்டும்போதுமா?

Thursday, July 15, 2010

வரலாறு கூறும்!

நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்


உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...


பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்


உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....


கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்


எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!


முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்குத் தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!


இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!


தொழிலாளி வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
'துரோகசாமி'
என்றே!

 
-க.பாலபாரதி

கிழிந்த காலணிதானா இவர்களின் வாழ்க்கை?

காலணிகள் கால்களுக்கு அழகூட்டும் நாகரிகம் மட்டுமல்ல, கால்களுக்குப் பாதுகாப்பும் கூட. ஆனால், அந்த காலணிகளைத் தைத்து வழங்கும் எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறதா?


பளபளக்கும் கண்ணாடி அறைகளில் எவ்வளவு விலை உயர்ந்த காலணிகள் விற்கப்பட்டாலும், அவை அறுந்து போனால் சரிசெய்கிறவர்கள் இவர்களே. அறுந்த வாராய்க் கிடக்கும் இந்த தொழிலாளர்களைக் கண்டுகொள்ளத்தான் எவருமில்லை.


ஒரு சாக்குப் பையும் குடையும் இணைந்த கூடாரமே இவர்களது தொழில் செய்யும் பட்டரை. இவர்களை ஒருபடி உயர்த்துவதற்காக பங்க் எனப்படும் ஒரு தகரக் கூண்டும், உதவித்தொகையும் வழங்கப்பட்டதுண்டு, உலக வேட்டை நிறுவனங்களுக்கு சாதகமான நிலை மாற்றங்களாலும், சமூகநலத்திட்டங்களை வெட்டிச்சுருக்கும் கொள்கையாலும் பின்னர் அந்த உதவிகளை அரசு நிறுத்திக் கொண்டது. மத்திய-மாநில அரசுகளின் இந்தக் கொள்கை மாற்றம் உள்ளாட்சிகளையும் விட்டுவைக்கவில்லை. காலணித் தொழிலாளர்களுக்கென்று தொழில் செய்ய சாலையோரமாகவும், மார்கெட்டிலும் இடம் ஒதுக்கிக் கொடுத்த உள்ளாட்சி அமைப்புகளே இன்று அவர்களை அந்த இடங்களிலிருந்தும் அப்புறப்படுத்துவது இன்னும் வேதனை.


சமூகத்தில் தீயைக் காட்டிலும் கொடுமையான தீண்டாமைக்கு உள்ளான இவர்களை, அரசு எந்திரமும் அப்படியே நடத்துகிறது. சென்னை போன்ற நகரங்களில் ஆங்காங்கே குடிசைகளில் வாழ்ந்தாலும், பெரும்பாலானோரின் வாழ்க்கை என்னவோ அதுவும் இல்லாததாக, ஒற்றைச்சுவர்களிலும், ஒதுக்குப்புறங்களிலும் ஒண்டியதாகவே இருக்கிறது.


 
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சாலையோரம், மார்க்கெட் வாயில், தெரு முனைகள் என வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் கண்ணியமாக தொழில் செய்கிற இவர்களை, நகரத்தை அழகுபடுத்துவது என்ற பெயரால் அடித்து விரட்டுவது என்ன நியாயம்? எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு பங்க்கும், 2500 ரூபாய் பணமும் கொடுத்தாங்க. அந்த பங்க்கை வைத்துக் கொள்ள முனிசிபாலிட்டியே இடம் கொடுத்துச்சி. ஆனா, இப்போ அரசாங்கமும் எங்களுக்கு பங்க் கொடுக்கிறத நிறுத்திக்கிடுச்சி. முனிசிபாலிட்டியும் வெரட்டுது. ஒரு நாள் முழுசும் உழைச்சா 50லிருந்து 100ரூபா கையில நிக்கும். இந்த நிலையிலும் தொழில் செய்ய விடாம வெரட்டுறாங்க, என்கிறார் டி. சுகுமார். தாம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் 30 ஆண்டுகளாக தொழில் செய்து வருபவர் இவர்.


உலகமயம், நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவிக்கும் சுகுமார், முன்னாடியெல்லாம் புதுசா செருப்பு தைக்க சொல்லிக் கேப்பாங்க, நாங்களும் தைச்சித் தருவோம். ஏதோ கொஞ்சம் காசு கிடைக்கும். பெரிசு பெரிசா கம்பெனிங்க வந்து கடை போட்டுட்டாங்க. அதனால செருப்பு தைக்க சொல்லி யாரும் கேக்கிறது இல்ல. செருப்பு அறுந்தா கூட தைக்க வர்றதில்லை. பழைய ஆளுங்க மட்டும்தான் புதுசா செருப்பு தைக்க சொல்லி கேக்கிறாங்க, என்றார்.


கேம்ப் ரோட்டில் கடை வைத்திருக்கும் சின்னத்தம்பி, சாலையை அகலப்படுத்துறாங்களாம், எம்ஜிஆர் காலத்தில் கொடுத்த பங்க்கை பயன்படுத்தி தொழில் செய்ய முடியவில்லை. கதர் தொழிலை வாழவைக்க எல்லோரும் கதர் வாங்குங்கனு சொல்லுறாங்க, ஆனா எங்களை வாழ வைக்க யார் என்ன செய்கிறார்கள், என்கிறார் ஆதங்கத்தோடு.


குடையையும், அறுந்துபோன காலணிகளையும் சீர்செய்யும் இவர்களின் வாழ்க்கையை சீர் செய்யும் பணியினை சிஐடியு இயக்கம் தொடங்கியுள்ளது. அதற்காக காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் தைக்கும் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளது.


அருந்ததியர், சக்கிலியர், தோட்டி என பல்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், வாழ்க்கையில் என அனைத்துத் தளங்களில் ஒடுங்கிக் கிடக்கும் இந்த மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற வேண்டும். சமூகத்தில் சம அந்ததோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை அணிதிரட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறோம். அதற்காக காலணி தைக்கும் தொழிலாளர்களையும், தோல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் திரட்டுகிறோம், என்கிறார் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் எ.அப்பனு.


பெரிய நிறுவனங்கள் கூட ஷூ பாட்டம், அப்பர், டாப் தயாரிக்கும் பணிகளை அவுட்சோர்சிங் விடுகிறார்கள். இந்த நிலையில், சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த, நலவாரிய உறுப்பினர்களிடமே பள்ளி மாணவர்களுக்கான செருப்புத் தைக்கும் பணியை ஒப்படைக்கலாமே என்பது போன்ற ஆலோசனைகளையும் சிஐடியு முன்வைத்திருப்பதை அப்பனு சுட்டிக்காட்டினார்.


நைந்த செருப்பாக உள்ளம் நொந்து கிடக்கும் இவர்களது வாழ்க்கையைத் தைத்து சீராக்க வேண்டியது தனது கடமை என்பதை ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் உணர்வார்களா?


 
அரசும் உள்ளாட்சியும் செய்ய வேண்டியது


வேலை செய்யும் இடங்களை அடையாளப்படுத்தி பங்க் மற்றும் கடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்


வேலை செய்யும் உபகரணங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு இலவசமாக குடியிருப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும்.


இத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச தேவையை உறுதிசெய்ய அரசுத் துறைகளில் தைத்து அனுப்பப்படும் காலணிகள் மற்றும் தோல் பொருட்களை செய்யும் பணியை, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.


இந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப அட்டை, சாதிச்சான்று உள்ளிட்ட சமூக நலத் தேவைகளை தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இவர்கள் ஏற்கெனவே சாலையோரம் பங்க் அமைத்துத் தொழில் செய்து வந்த நிலையில் சாலையை அழகுபடுத்துவதாகக்கூறி பங்க்குகள் எடுத்து செல்லப்பட்டன. அந்த பங்க்குகளை உயர்நீதிமன்ற ஆணைப்படி அவர்களிடமே திரும்பவும் வழங்க வேண்டும்.


 
தாட்கோ பலன்கள் கிடைக்கவும், சுயதொழில் செய்ய வங்கி கடன்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, June 30, 2010

கல்லூரிக் கனவு கலையுமோ?

சாதிச்சான்றிதழ் என்பதே பழங்குடியின மக்களின் கல்வி, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காகத்தான். ஆனால், அதை வழங்க மறுப்பதன் மூலம் அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது அதிகார வர்க்கம். பழங்குடியின பெண்ணான தீபாவுக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் இதைத்தான் காட்டுகிறது.

பெண்கல்வியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருசில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விண்ணப்பித்த உடனேயே ஆய்வு செய்து விரைந்து சாதிச்சான்றிதழ் வழங்குவதாக அரசு அவ்வப்போது கூறி வருகிறது. பழங்குடியின சமுதாயத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வருகின்ற மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவது ஊரறிந்த உண்மை.

தாம்பரம் வட்டத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூரை சேர்ந்தவர் கே.ஏழுமலை. இருளர் பிரிவைச் சேர்ந்த இவரது மகள் தீபா. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 773 மதிப்பெண் பெற்றுள்ள அவருக்கு, மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் பி.காம் படிக்க இடம் கிடைத்து. ஆனால், சாதிச்சான்றிதழ் இல்லாததால் இடம் கிடைத்தும் தற்போது கல்லூரியில் சேர முடியாமல் ஏக்கத்தில் வாடி நிற்கிறார் தீபா.

“2009 செப்டம்பர் 16ம் தேதியன்று சாதிச்சான்றிதழ் கேட்டு அன்றைய செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். அது தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியரை கேட்டால் வட்டாட்சியரை பார்க்கச் சொல்கிறார். வட்டாட்சியரை கேட்டால் கிராம நிர்வாக அலுவலரிடம் (விஏஓ) விண்ணப்பிக்க சொல்கிறார். விஏஓ-வை கேட்டால் கலெக்டரை சந்திக்க சொல்கிறார். இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் இழுத்தடிக்கிறார்கள்,” என்றார்.

தன் கல்லூரிக் கனவு கலைந்து விடுமோ என்று கலங்கும் தீபா “எங்க குடும்பத்திலேயே முதல்முறையாக கல்லூரி போகிறேன் என்ற பெருமிதத்தோடு இருந்தேன். கல்லூரியில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கம் சென்றிருந்தேன். சாதிச்சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். மாணவர் சேர்ககை முடிய போகிறது. இப்போதும் சாதிச்சான்றிதழ் தர மறுக்கிறார்கள். எப்படியும் சாதிச்சான்றிதழ் கிடைத்துவிடும் என்று காத்திருக்கிறேன்.” என்று கண்ணில் நீர் மல்கக் கூறினார்.

இவரின் கண்ணீர் துடைக்க தமிழக அரசு கரம் நீட்டுமா?

Monday, May 31, 2010

நாராய் கிழியும் நார் நெசவாளர் வாழ்க்கை


நெசவுத் தொழிலில் தமிழகத்திற்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி வரும் அனகாபுத்தூர் நெசவாளர் களுக்கு தனியாக ஒரு இடம் கொடுப்பதாக மத்திய மாநில அமைச்சர், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது. இதனால் இயற்கை நார் நெசவுத் தொழில் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சென்னை புறநகர் பகுதியில் உள்ள அனாகபுத்தூர் நகராட்சியில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் செயல்பட்டு வந்தன. இடநெருக்கடி, போதுமான வருமானம் இல்லாததால் பலர் வெளியேறியது போன்ற காரணங்களால் தற்போது 350 தறிகள் மட்டுமே செயல்படுகின்றன.

இந்த தறிகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். தறிகளால் எழும் சத்தத்தாலும், நூல்களை பதப்படுத்த வாசல்களை ஆக்கிரமித்துக் கொள்வதாலும் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர்.


இத்தகைய நெருக்கடிகளையும் மீறி கற்றாழை, சணல், வாழை, மூங்கில், பைனாப்பிள் உள்ளிட்ட 25வகையான இயற்கை நார்களைக் கொண்டு நெசவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் கீழ் 50குடும்பங்கள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளன. புடவை, சட்டை, சுடிதார் வகைகள், திரைச்சீலைகள் என நெசவு செய்கின்றனர்.


இத்தகைய துணி வகைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்களில் இருந்தும் கேட்கின்றனர். இருப்பினும், போதிய இடவசதி, புதிய உபகரணங்கள் வாங்க வசதியின்மை காரணமாக குறிப்பிட்ட அளவுக்குமேல் இவர்களால் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளனர்.


இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மதுரை முன்னாள் மக்களவை உறுப்பினர் மறைந்த பி.மோகன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பிரபலமானது. 2007ம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய ஜவுளித்துறை அதிகாரிகளை அனகாபுத்தூருக்கே அழைத்து வந்து இத்தொழிலை ஊக்குவிக்க கோரினார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் அப்போது இத்தொழிலை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

இத்தகைய சூழ்நிலையில் நெசவுத் தொழில் தொடர்ந்து இயங்க முதலமைச்சர் இலவச நிலம் வழங்க கோரி தனிப்பிரிவுக்கு நெசவாளர்கள் மனு அளித்தனர். அதன்பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறித் துறை செயலாளராக இருந்த விஸ்நாத் செகாவத் ஆகியோர் இயற்கை நார் நெசவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவச நிலம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி, அன்றைய கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவிடம் மனு அளித்தார். அதனை பரிசீலித்து வருவதாக செய்தியாளர்களிடம் ராஜா கூறினார். ஆனால், 3ஆண்டுகளாகியும் நெசவாளர்களுக்கு இலவச இடம் கிடைக்கவில்லை. அவர் முன்னாள் அமைச்சராகி விட்டதால் வாக்குறுதியும் முன்னாளாகி விட்டதோ?

இது தொடர்பாக அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சேகர் கூறுகையில், “2007ம் ஆண்டு அனகாபுத்தூருக்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் இயற்கை நார் நெசவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வீடுகட்டி வழங்கப்படும் என்றார். மிகுந்த நம்பிக்கையோடு இருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.


“தற்சமயம் வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை காலிசெய்ய சொல்கின்றனர். புதிதாக வீடுகளை வாடகைக்கு தர மறுக்கின்றனர். ஆகவே, இயற்கை நார் தொழில் தொடர்ந்து நடைபெற முதலமைச்சர் இலவசமாக நிலம் வழங்க வேண்டும். தமிழக அரசு இலவசமாக நிலம் வழங்கும் பட்சத்தில் ஒரு கிளஸ்டர் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.” என்றும் அவர் கூறினார்.


“கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்று இந்திய தொழில்நுட்ப கழகம் சான்றளித்து உள்ளது. இயற்கை நார்களை கொண்டு கேரளாவில் உற்பத்தி செய்கிறவர்களுக்கு அந்த மாநில அரசு 50விழுக்காடு மானியம் வழங்குகிறது. அதேபோன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

“கனடா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், சென்னை நகரின் பிரபலமான ஜவுளி கடைகளில் இருந்தும் ஆர்டர் கொடுக்கிறார்கள். போதிய வசதி இல்லாததால் அவர்களுக்கு துணிகளை வழங்க முடியவில்லை. இலவச நிலம், அரசின் உதவி, மானியம் கிடைத்தால் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தி மேலும் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அன்னிய செலாவணி ஈட்டவும் வாய்ப்பு உள்ளது.” என்கிறார் சேகர்

நெசவு தொழில் பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் புதுப்புது உத்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் இயற்கை நார் நெசவாளர்களின் பக்கம் அரசின் கவனம் திரும்புமா?

Sunday, May 30, 2010

சீரழிக்கப்படும் நாற்றாங்கால்

தமிழ் திரையுலகில் துவக்கத்திலிருந்தே இரண்டு நடிகர்களை எதிரெதிர் துருவங்களாக சித்தரிப்பதும், இதனால் ரசிகர்கள் மோதிக் கொள்வதும், அதில் நடிகர்கள் கல்லாக் கட்டுவதும் அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் ரசிகர் மன்றங்கள் ஆலவிருட்சமாக வளருவது எப்படி? இளம் பருவத்தினர் ரசிகர் மன்றம் என்ற சுழலில் சிக்கிக் கொள்வது எதனால்? இதன் சூட்சமம் என்ன?

சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு உந்தி செல்ல வேண்டிய இளைஞர்களில் பெரும்பகுதியினர் ரசிகர் மன்றம் என்ற பெயரால் எவ்வாறு திசை மாறுகின்றனர் என்பதை இந்த நூல் அலசி ஆராய்கிறது. எதார்த்தங்களை யும், மேக்கப் போட்ட நடிகர்களின் நிஜ(கோர)முகத்தையும் தோலுரிக்கிறது.

திரைத்துறை தொடர்பான பல்வேறு தகவல்களைக் கொண்டதாகவும், தமிழக அரசியல்-சினிமா உறவை, சொல்வதாகவும் இந்த நூல், பல்வேறு விவாதங்களையும் எழுப்புகிறது.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற வேட்கை, நற்செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் உள்ள இளைஞர்களை ரசிகர் மன்றம் என்ற தீ பற்றிக் கொள்கிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் கூட்டு சதி வலையில் லாவகமாக மாட்டிக் கொள்கின்றனர்.

கோடிகள் (ரூபாய்) புரள்வதாலும், நடிகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தாலும், அவர் களை ஊட கங்கள் சாதனையாளர்களாக சித்தரிக்கின்றன. அவர்களின் பின்னால் இளைஞர்களை திரட்டுகின்றன. இந்தியாவின் நாற்றாங் கால்களான இளைய சமூதாயத்தை சமூக பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பி சீரழிக்கின்றன.

அரசியல் கட்சிகளில் சாதி ஆதிக்கம் நிலவுகிறது. இதனால் குடிசை பகுதி அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனாலும், திட்டமிட்டு செய்யப்படும் ஊடக பிரச்சாரத்தினாலும் அரசியல் மீது அவநம்பிக்கை கொள்ளும் இளைஞர்கள் சினிமா நடிகர்களையே தலைவர்களாக தொழுகின்றனர்.

ரசிகர்மன்றங்களில் பெரும்பகுதி குடிசை பகுதி, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள் ளன. ரசிகர்களில் 50விழுக்காட்டினர் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளனர். பொதுவாக, ரசிகர்கள் தங்கள் ரசிப்பை, மன்றமாக பகிரங்கப்படுத்தும்போது அதனை நடிகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படங்களுக்கு வசூலில் குறைந்த பட்ச உத்தரவாதம் கிடைக்கிறது. இதற்கு மாறாக ரசிகர்களுக்கு நடிகர்கள் தரக் கூடிய குறைந்த பட்ச உத்தரவாதம் என்ன?

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டு காலம் கடத்துவது வணிக தந்திரமாக மட்டுமல்ல; அரசியல் எதிர்காலத் திற்காகவும்தான். அதனால் தான் என்னவோ ஆளாளுக்கு வருங்கால முதல்வர் என போஸ்டர் அடித்துக்கொள்கிறார்கள்.

திரைப்படங்கள் இன்று வலுமிக்க பிரச்சார சாதனமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் செய்ய முடியாததை ஒரு திரைப்படம் செய்கிறது. இத்தகைய திரைத்துறையை பயன்படுத்தி அந்தக்கலை மேம்படுத்தப்படுகிறதா?

ஒரு நடிகர் நடித்த படங்களை ஒப்பீட்டளவில், கதாபாத்திரங்களை அலசி ஆராயக்கூடிய ரசிகனை எந்த நடிகரும், ரசிகர் மன்றங்களும் விரும்புவதில்லை. ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகளையும் மீறி ஆற்றல் மிக்க படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும். அதுதான் ஒரு கலைஞனை அளவிடும் அளவுகோல் என்பதை நடிகர்கள் மறந்து விடுகிறார்கள்.

தனிப்பட்ட நடிகர்கள் மீதான மோகத்தை விட திரைப்படங்கள் மீதான ரசனை வளரும் போதுதான் கலையின் வளர்ச்சி, சில அங்குலம் உயர்கிறது. இதற்காக சில முயற்சிகள் நடந்து வருவதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

ரசிகர் மன்றங்கள் ஆராதனை மன்றங்களாக இல்லாமல், மக்களுக்கான கலைப் படைப்புகளை ஆதரிக்கிற சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு தானாக அதிகரிக்கும் என்ற நூலாசிரியரின் கருத்தை தமிழ் திரையுலகம் ஏற்றுக் கொள்ள துவங்கி இருப்பதாக கருத வேண்டி உள்ளது, நச்சு படைப்புகள் ஒருபுறம் வந்து கொண்டிருந்தாலும், நடிகர்களை சார்ந்து இல்லாமல், சமூகத்தின் அவலங்களை, வாழ்வியல் எதார்த்தங்களை சொல்லும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. கட் அவுட்களுக்கு பால், பீர் அபிஷேகம், நடிகனுக்கு கையில் கற்பூரம் காட்டுவது என்பன போன்ற முட்டாள் தனமான நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இன்றுள்ள அரசியல், சமூக சூழலில் இந்த மாற்றம் பாய்ச்சல் வேகத்தில் செல்ல வேண்டி உள்ளது.



உய்... உய்.. ரசிகர்மன்றங்களின் நோக்கும்-போக்கும்

ஆசிரியர்: கோவி.லெனின்

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, சென்னை-14

பக்கம்: 136

விலை: ரூ.80

Tuesday, April 20, 2010

மறைமலை அடிகள் நினைவு இல்லம் ரூ.15லட்சம் செலவில் புதுப்பிப்பு

புறக்கணிக்கப்பட்டிருந்த மறைமலையடிகள் நினைவில்லத்தை புதுப்பிக்க, தீக்கதிர் செய்தியையடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


சென்னையடுத்த பல்லாவரத்தில் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம், மறைமலை அடிகளார் கலை மன்றமாக செயல்பட்டு வருகிறது, இதன் நிர்வாக பராமரிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது குறித்தும், கடந்த 15ஆண்டுகளாக அந்த கட்டிடத்திற்கு சுண்ணாம்பு கூட அடிக்காமல் இருப்பது குறித்தும், இதனால் கட்டிடம் பாழடைந்து கிடப்பது பற்றியும் தீக்கதிர் ஏப்.12 இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த சூழலிலாவது அந்த இல்லத்தை அரசே ஏற்று தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே என்ற கருத்தும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியின் பின்னணியில் காஞ்சி மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அந்த நினைவில்லத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு திங்களன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மறைமலை அடிகளார் நினைவு இல்லம் தற்போது தென்னிந்திய தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பில் உள்ளது. இக்கட்டிடம் 1914ம் ஆண்டில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்தநிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மறைமலை அடிகள் நினைவு இல்லத்தை பழுதுபார்ப்பதற்கு தென்னிந்திய தமிழ்ச்சங்கம் என்ற நிறுவனத்திற்கு 15லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். அத்தொகையை பொதுப்பணித்துறைக்கு அளித்து, அத்துறை மூலம் வைப்புத் தொகைப் பணியாக மறைமலை அடிகளார் நினைவு இல்லம் பழுதுபார்த்து சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். பழுதுபார்ப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 15, 2010

மறக்கப்பட்ட மறைமலை அடிகள்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கத்தோடு தனித் தமிழ் இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். அந்தத் தமிழ் அறிஞர் வாழ்ந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. உடைந்த அவரது உருவ சிலையைக் கூட கண்டுகொள்ள ஆள் இல்லை.


மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். 1876ல் பிறந்த இவர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். புகழ் பெற்ற தமிழறிஞராகவும் ஆய்வாளராகவும் விளங்கிய மறைமலை அடிகள், தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.

தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். சாதிசமய வேறுபாடின்றிப் சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர்.

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் சாவடி தெருவில் 8ஆண்டுகள் சிரமப்பட்டு வீடு கட்டி வசித்து வந்தார். 1950ல் அவரது மறைவுக்கு பிறகு, அந்த இல்லத்தை 1962 மார்ச் 21 அன்று மறைமலை அடிகளார் கலை மன்றமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 1962, ஜூலை 12 அன்று மதுரை திருஞான சம்பந்தர் ஆதினம் அருட்திரு சோமசுந்தர ஞானசம்பந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்றைய கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலம் கலை மன்றத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கலை மன்றத்திற்கு மத்திய அரசு ரூ.25ஆயிரம், மாநில அரசு ரூ.10ஆயிரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ரூ.5ஆயிரம் என நன்கொடை வழங்கின. இதன் நிர்வாக பராமரிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ஏற்றுக்கொண்டது.

கடந்த 15ஆண்டுகளாக அந்த கட்டிடத்திற்கு சுண்ணாம்பு கூட அடிக்காமல் உள்ளனர். இதனால் கட்டிடம் பாழடைந்து பொலிவிழந்து கிடக்கிறது என்று பல்லாவரம் ரயில்வே டேசன் ரோடு நடைபாதை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்க செயலாளர் எ.பி.காந்தி கூறுகிறார்.

இந்த கட்டிடத்தில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் கிளை நூலகம் இயங்குகிறது. அதற்கு சைவ சித்தாந்த சங்கம் வாடகையும் வசூலிக்கிறது. இந்தக் கட்டிடம் சிதிலமடைந்து மழைக் காலங்களில் ஒழுகல் ஏற்பட்டு நூலக புத்தகங்கள் நனைகின்றன. கட்டிடத்தின் மேற்பூச்சுக்கள் எல்லாம் பெயர்ந்து விழுந்து உள்ளே இருக்கும் செங்கற்கள் தெரிகின்றன.

கட்டிடத்தின் வாயிலில் மறைமலை அடிகளாரின் மார்பளவு உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெய்த பெரு மழையால் அந்த பீடம் இடிந்து உருவச் சிலையும் கீழே வீழ்ந்தது.

இதனையடுத்து, இந்த கட்டிடத்தை சரி செய்யப் போவதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை மற்றும் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் என ஒரு வார காலம் மாறி மாறி வந்து முகாமிட்டு ஆய்வு செய்தனர். உடனடியாக நிதி ஒதுக்கி மறைமலை அடிகள் இல்லம் சரி செய்யப்படும். சுற்றுசுவர் கட்டப்படும் என்றெல்லாம் உறுதி அளித்தனர். ஓராண்டாகியும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மறைமலை அடிகள் சிலை கூட மீண்டும் நிறுவப்படாமல் ஓரமாக வைக்கப்படுள்ளது. சிலையை நிறுவவோ, கட்டிடத்தை பராமரிக்கவோ கூட பணம் இல்லை என்று திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் கூறுகிறது.

மறைமலை அடிகளை தமிழக அரசும், அரசு நிர்வாகமும் மறந்துவிட்டது என்றால், சைவ சித்தாந்த சங்கமும் கைகழுவ நினைக்கிறது. சிலையை கூட நிறுவ முடியாதவர்களிடம் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் கலைமன்றத்தை ஒப்படைத்து பாழடைய வைப்பது ஏன்? உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த சூழலிலாவது அந்த இல்லத்தை அரசே ஏற்று தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே!

Monday, April 12, 2010

அம்மணக்குண்டி சுதந்திரம்-----

அவள் சொல்கிறாள்

அம்மணமாக திரிவது

என் பிறப்புரிமை

நான் சீட்டியடித்துச் சொல்கிறேன்

அம்மணக்குண்டி

அதோ பாரு அம்மணக்குண்டி



அவள் சொல்லுகிறாள்

என் உரிமையில் தலையிடுகிறாய்

நான் சொல்லுகிறேன்

அம்மணமாய்த் திரிவது உன் உரிமை

அம்மணக்குண்டி என்று சொல்லுவது

என் உரிமை

இதில் எங்கே இருக்கிறது

சுதந்திர மீறல்



இந்த அரட்டையில் இடை புகுந்த

ஒரு பெருசு சொன்னது

அம்மணக்குண்டி ராஜ்ஜியத்தில்

கோவணம் கட்டியவன்

பைத்தியக்காரன்





(எனக்கு இ-மெயில் வந்த கவிதை)

Saturday, April 3, 2010

பேருந்து கட்டணம்-பெருங்கட்டணம்



சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசு திண்டாடி வருகிறது. பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலமே அதனை செய்ய முடியும். தமிழக மக்களின் தேவையை உணர்ந்து சில நூறு பேருந்துகளை வாங்கி உள்ளது. அந்த பேருந்துகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாதபடிஅதிக கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

சாதாரண பேருந்துகளில் (வெள்ளை போர்டு) 2ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரணப் பேருந்துகளை விட எல்எஸ்எஸ் பேருந்துகளில் 50பைசாவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஒன்றரை மடங்கும், டீலக்ஸ் பேருந்துகளில் எல்எஸ்எஸ் பேருந்துகளை விட இரண்டு மடங்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எம் சர்வீஸ் பேருந்துகளில் ஒரு விதமாகவும், ஏசி பேருந்துகளில் ஒரு விதமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆட்டோக் கட்டணத்தை விட ஏசி பேருந்து கட்டணம் குறைவு என்றாலும் கூட, சாதாரண பேருந்துகளை கூட பயன்படுத்த முடியாதவர்கள் சென்னையிலும், அதனை சுற்றியுள்ளவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதை அரசு உணர வேண்டும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 3000க்கும் அதிகமான பேருந்துகளில் குறைந்தபட்சம் 2ஆயிரம் பேருந்துகளையாவது சாதாரணக் கட்டணத்தில் இயக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதின் மூலமே சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

சென்னையில் உள்ள பேருந்துகளில் 5ல் ஒரு பகுதி மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண பேருந்துகளுக்காக சாலையோரங்களில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலக்கு ஒரு காரணமாக அமைகிறது. சாதாரண பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதால், படிகளில் தொங்கிச் செல்வதும், விபத்து ஏற்படுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

பாலங்கள் கட்டுவதாலும், சாலைகள் விரிவாக்கம் செய்வதாலும் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியாது. பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் பேருந்துகளின் பெயர்களை மாற்றி கட்டணக் கொள்கை நிகழ்த்துவதையும் கைவிட வேண்டும்.

இரவு நேரப் பேருந்துகள் அதிகரிக்கப்படுமா?

சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரப் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 3,207 பேருந்துகள் 288 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றில் 625பேருந்துகள் சாதாரண கட்டணத்திலும், 2402 பேருந்துகள் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், எம் சர்வீஸ் என்ற பெயர்களில் அதிக கட்டணத்திலும் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் நாள்தோறும் சராசரியாக 43.55 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம், பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் இரவு 10.30 மணிக்கு மேல் 48 பேருந்துகள் மட்டுமே இரவு நேரப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அதிகாலையிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அண்ணா சாலை போன்ற முக்கியமான வழித்தடங்களில் மட்டுமே, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையின் உட்புறப் பகுதிகளில் இரவு 10.45 மணிக்கு மேல் பேருந்துகளே இயக்கப்படுவதில்லை.

இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவு நேரத்தில் பணியை முடித்து செல்கிறவர்களும், இரவு பணியாற்றுகிறவர்களும் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சென்னை புறநகர் ரயில்கள் சேவை இரவு 12 மணி வரை இருந்தாலும், ரயிலில் இருந்து வரும் பயணிகளும் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இரவில் மணிக் கணக்கில் லாரிக்காக காத்து கிடந்து, பாதுகாப்பில்லாத பயணத்தையும் சிலர் மேற்கொள்கின்றனர்.

பண வசதி உள்ளவர்கள் ஆட்டோ, ஆம்னி கார்களில் சென்று விடுகின்றனர். மற்றவர்களோ, அதிகாலைவரை பேருந்துக்காக காத்திருந்து நிலைதான் உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளுக்கு பகலில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏராளமானோர் தினந்தோறும் சென்னைக்கு வந்து செல்கின்றனர்..

பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்வெட்டு காரணமாக இரவு நேரப்பணி ஆகியவற்றால் தொழிலாளர்களின் பணிக் கலாச்சாரம் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது இரவு நேர பணி கலாச்சாரத்தையே கடைபிடிக்கின்றன. ஆகவே, பகல் நேரத்தில் அளிக்கப்படும் பேருந்து வசதி இரவிலும் வழங்க வேண்டும். இரவு நேரத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்தை இயக்க வேண்டும்.

Friday, April 2, 2010

உச்ச நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு

சென்னை மாநகர பேருந்துகளில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (சிஎன்ஜி) இன்னும் பயன்படுத்தாமல், உச்சநீதிமன்ற வழிக்காட்டுதலை தமிழக அரசு தட்டிக் கழித்து வருகிறது.


தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று/சுற்றுசூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 2002ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனையடுத்து தில்லி அரசு, தனது பேருந்துகளில் சிஎன்ஜி கேஸ் பயன்படுத்தி வருகிறது.


சென்னையில் முதற்கட்டமாக ஆட்டோக்களில் கேஸ் பயன்படுத்தும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. கேஸ் உபகரணங்கள் ஆட்டோக்களில் பொறுத்த அதிக செலாகும் என்பதால் இதற்கு தொழிற்சங்கங்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கொல்கத்தாவில் கேஸ் கிட் பொறுத்த ஒரு ஆட்டோவிற்கு 5ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.


இதனையடுத்து 2ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அரசு அறிவித்து ஆணையும் பிறப்பித்தது. இந்த தொகையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, 3ஆயிரம் ரூபாய் என மானியத் தொகை மாற்றப்பட்டது. ஆனால் அந்த தொகை வழங்கப்படுவதில்லை என்று ஆட்டோ தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சென்னை நகரம், புறநகர் பகுதியில் சுமார் 60ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் சுமார் 25ஆயிரம் ஆட்டோக்கள் கேஸில் இயங்குகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு தேவையான கேசை நிரப்ப போதுமான மையங்கள் (கேஸ் பங்க்கு) இல்லை.


சென்னை நகருக்குள் அண்ணாசாலை, ராயப்பேட்டை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி உள்ளிட்ட 7நிரப்பு மையங்களே உள்ளன. இதுபோதுமானதாக இல்லை. அரசின் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் கேஸ் நிரப்பும் மையங்களை அமைக்க பெட்ரோல் பங்க்குகள் முன்வருவதில்லை. இதன் காரணமாக கேஸ் நிரப்பிக் கொள்ள சாலைகளில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதை அடிக்கடி பார்க்க நேர்கிறது.


இதனால், கேஸ் கிட் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் கூட பெட்ரோல் டீசலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சுற்றுசூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் பயனற்று நிற்கிறது.


பேருந்துகளுக்கு கேஸ் எப்போது?

2006ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, படிப்படியாக அரசு பேருந்துகளில் கேஸ் பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பேச்சளவிலேயே உள்ளது.


திமுக பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்டன (3,207 பேருந்துகள் உள்ளன). 2009ல் கூட கேஸ்கிட் பொருத்தப்படாத பேருந்துகளையே வாங்கியுள்ளனர்.


மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டத்தை அரசே சீர்குலைக்கிறது. உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதலை தட்டிக்கழிக்கிறது. தில்லியில் கேஸ் பொருத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் போது சென்னையில் இயக்க அரசு மறுப்பது ஏன்?


இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், “சென்னை நகரில் கூடுதலாக கேஸ் நிரப்பும் மையங்களை அமைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் அல்லது தமிழக அரசே போக்குவரத்து பணிமனைகளில் கேஸ் நிரப்பும் மையங்களை அமைத்து ஆட்டோக்களுக்கு கேஸ் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளை கேஸ் முறைக்கு மாற்றும்போதும் இந்த கேஸ் நிரப்பும் மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

தொழிலாளர்களின் குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா?

Monday, March 15, 2010

உணவுப்படி உயருமா?

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 1206 பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.


இந்த விடுதிகள் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி காணப்படுகின்றன.இவற்றை சரி செய்ய வேண்டிய அதிகாரிகளும், அரசு எந்திரமும் தூங்கி வழிகிறது.


இந்த கடுமையான விலைவாசி உயர்விலும் பள்ளி மாணவனுக்கு நாளொன்றுக்கு 15ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 18 ரூபாயும் உணவுப்படியாக கொடுக்கிறது. இந்த தொகை மாணவர்களின் உணவு தேவையில் 25சதவீதத்தை கூட பூர்த்தி செய்யாயது என்பது சாதாரணமாக தெரிகிறது.


ஆகவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும். தரமான ஊட்டச்சத்துள்ள உணவினை உணவுப்பட்டியல்படி வழங்க வேண்டும். விடுதிகளில் சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விடுதியில் இடம் கிடைக்கும் வகையில் புதிய விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையல்லவா?

 
முதுநிலை மாணவர்களுக்கு விடுதியில் இடம் கொடுக்க நிலை நீடிப்பது எப்படி முறையாகும்? இன்னும் கொடுமை என்னவெனில் பல விடுதிகளில் சமையலர், உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளது. இதனை செய்யாமல் எப்படி மாணவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். படிப்பதற்கான சூழ்நிலை எப்படி உருவாகும்.

சாதிய உணர்வோடு செயல்படும் ஓவியக்கல்லூரி முதல்வர்

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இங்கு 15பேர் மட்டுமே உள்ளனர். இதனால் முன்னாள் மாணவர்கள் இலவசமாக வகுப்பெடுக்கின்றனர்.


இக்கல்லூரியில் முதுநிலை பயிலும் மாணவர் சசிக்குமார், திருக்குறளை சுடுமண் சிற்பமாக வடித்து உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் வைக்க திட்டமிட்டார். இதற்காக கல்லூரி முதல்வர் மனோகரனை அணுகியுள்ளார். கல்லூரி நிதியில் இருந்து பணம் வழங்க மறுத்த அவர், சொந்த செலவில் மூலப்பொருட்களை வாங்கிக் கொள்வதோடு, கல்லூரி வளாகத்திலேயே சூளையை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இச்செலவினங்களுக்கான தொகையை பின்னர் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.



இதனையடுத்து சக மாணவர்களின் உதவியோடு சுடுமண் சிற்பத்தை தயாரிக்கும் பணியில் சசிக்குமார் ஈடுபட்டார். 1330 குறளுக்கான சிற்பத்தையும் செய்து கொண்டே அவற்றை சூளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வப்போது கல்லூரி முதல்வரை சந்தித்து சசிக்குமார் பணம் கேட்டு வந்துள்ளார்.



இச்சூழ்நிலையில் சில விஷமிகள் மனோகரனின் காரை சேதப்படுத்தியுள்ளனர். அதனை சசிக்குமார் செய்ததாகவும், அவரை முன்னாள் மாணவர்கள் யஷ்வந்திரன், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டுள்ளார் என்று மனோகரன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


இதனையறிந்த சசிக்குமார், கமலஹாசன் ஆகியோர் தலைமறைவாகினர். யஷ்வந்திரனையும், அவரது தம்பியையும் அடித்து இழுத்து சென்ற போலீசார், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து சாதி பெயரை கூறி திட்டியதோடு பூட்ஸ் காலால் மிதித்து சித்தரவதை செய்துள்ளனர். மறுநாள் சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த சம்பவங்களின் விளைவாக சசிக்குமார் செய்து வைத்திருந்த 300க்கும் மேற்பட்ட சிற்பங்கள் சூளையிடாததால் உடைந்துவிட்டன. ஒரு சிற்பம் தயாரிக்க குறைந்தது 3மணி நேரம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


“யஷ்வந்திரன், கமலஹாசன் ஆகியோர் தலித் மாணவர்கள் என்பதற்காகவும், சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கூறியதற்காகவும் காழ்ப்புணர்ச்சியோடு மனோகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்” என்று மாணவர்கள் கூறினர்.

 
இதனைக் கண்டித்து மார்ச்-9 அன்று எழும்பூரில் மாணவர்கள் கண்டனக் கூட்டம் நடத்தினர். இதில், சாதிய உணர்வோடு செயல்படும் கல்லூரி முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்

வாரிசு சான்றிதழ் ரூ.2000 - வட்டாட்சியர் அலுவலகத்தில் அமோக விற்பனை

கிண்டி-மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகம் கே.கே.நகரில் செயல்பட்ட வருகிறது.


இதன் கீழ் வேளச்சேரி, அடையார், கிண்டி, காணகம், ஈக்காடுதாங்கல், மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, நெசப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.


இந்த அலுவலகத்தில் வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, வாரிசு சான்று ஆகியவற்றை பெறுவது குதிரைக்கொம்பாகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் வெதும்புகின்றனர்.


15 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழும்,7நாட்களுக்குள் இதர சான்றிதழ்களும் வழங்கப்படும் என்ற அரசாங்க அறிவிப்பு பலகையில் உள்ளது. ஆனால், அந்த அறிவிப்பை அங்குள்ள அதிகாரிகள் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை.


சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் வாரத்திற்கு 3நாட்கள் வீதம் பல மாதங்களுக்கு அலைகழிக்கின்றனர். மனு தொலைந்து விட்டது என்று கூறி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கச் சொல்கின்றனர். (தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோரும்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடாம்!) அப்போதும் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.


புரோக்கர்கள் மூலமாக சென்றால் 3நாட்களில் அனைத்து விதமான சான்றிதழ்களும் கிடைக்கின்றன. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை விட புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கியதற்காக நிலஅளவையர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி 9வது மண்டலம் 131வது வட்டத்தில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதி உள்ளது. இங்கு ஜஹவர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் வீடுகளாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக முதற்கட்டமாக 29 பயனாளிகளையும், இரண்டாம் கட்டமாக 42பயனாளிகளையும் மாநகராட்சி தேர்வுசெய்துள்ளது.


இந்த பகுதிகளில் உள்ள பயனாளிகள் வாரிசு, வருமான சான்றிதழ் ஆகியவற்றை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக விண்ணப்பித்தவர்களை வட்டாட்சியரும், வருவாய் ஆய்வாளரும் அலைகழித்து வருகின்றார்களாம்.


அன்னை சத்யா நகரில் குடியிருக்கும் வி.சிவபூசணம் (வயது 65) பூ விற்பவர். வாரிசு சான்றிதழ் கோரி 9-11-09அன்று விண்ணப்பித்த அவருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. “ஒரு நாள் முழுக்க பூ விற்றால் 50ரூபாய் கிடைக்கும். என்கிட்டப்போய் 2ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். என்னோட மொத்த மாச வருமான ரூ.1500தான். அவ்வளவு பணத்தை எப்படி நான் கொடுக்க முடியும்?” என்கிறார் அவர்.


3வருடமாக அலைந்தும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்காத விஜயா, 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். தனது மகளின் திருமணத்திற்கு அரசு உதவி பெறுவதற்காக 3 மாதங்களுக்கு முன்பு வருமானச்சான்று கோரி விண்ணப்பித்தார். அங்குள்ளவர்கள் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டார்களாம். அதனை கொடுக்காததால் அவரும் சான்றிதழ் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.


இதேபகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். 10மாத போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பிறகு 1500ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் சான்றிதழ் பெற்றுள்ளார்.

 
இவர்களைப் போன்று நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். சட்டப்படி தந்தாகவேண்டிய சான்றிதழ், இப்படி வியாபாரச் சரக்காக மாற்றப்பட்டிருப்பது தொடர்கிறது.

Friday, February 26, 2010

தோழர் உ.ரா.வரதராசன் மரணம்:



தோழர் உ.ரா.வரதராசன் 2010 பிப் 11 அன்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் சென்று விட்டார். அதன்பின்னர் பிப்.14 அன்று காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.    போரூர் ஏரியில் இருந்து பிப்.13 அன்று கண்டெடுக்கப்பட்ட உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்திருந்த போலீசார் பிப்.21ம் தேதிதான் அடையாளம் காட்ட கட்சியினரையும், குடும்பத்தினரையும் அழைத்தனர்.

திமுக அரசின் திட்டமிட்ட, திசை திருப்பல் நடவடிக்கையால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அவதூறுகளை கிளப்பி கொச்சைப்படுத்தியது. தோழர் உ.ரா.வரதராசன் மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது இழப்புக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். உ.ரா.வரதராசனை புகழ்வதுபோல் அவரை களங்கப்படுத்திய ஊடகங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் விட்டுவைக்கவில்லை. எந்த கட்சிக்காக 40வருட காலமாக உ.ரா.வரதராசன் உழைத்தாரோ, அந்தக்கட்சியை அவரைக் கொண்டு களங்கப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சவாலை கட்சி எதிர்கொண்டு முறியடிக்கும். இதன் ஒருபகுதியாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டுள்ள விளக்க கடிதம் வருமாறு:

தோழர் உ.ரா.வரதராசன் மரணம்


“தோழர் உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந் திருப்பது, ஒட்டுமொத்த கட்சியையும் விரிந்து பரந்த தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டபிள்யுஆர்.வி. என்று பிரபலமாக அறியப்பட்ட, அவர் ஒரு ஆற்றல்மிக்க தொழிற் சங்கத் தலைவர். சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவர். பிப்ரவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வரையிலும் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.


பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் உ.ரா.வரதராசன் மீது கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 11ந்தேதி இரவு இது நடந்திருக்கலாம். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பினை செய்த, பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட ஒரு தோழரின் இந்தத் துயரமான முடிவு கட்சிக்குள்ளும், அவரோடு இணைந்து பணியாற்றிய நம் அனைவருக்கும் மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது.


அவர் மரணமடைந்த விதமானது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது இயல்பான ஒன்றே. ஆனால் இந்த துயரார்ந்த நிகழ்வை ஒரு பகுதி ஊடகத்தினர், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் கூறுவது, விஷயத்தை திரித்துக் கூறுவது, அடிப்படையற்ற ஊகங்களை எழுப்புவது என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது மிகவும் துரதிருஷ்ட வசமானது. இந்த நிலையில் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை, எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்களை விளக்குவது அவசியம் என்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு கருதுகிறது.


உ.ரா.வரதராசன் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று பெண் ஒருவரிடமிருந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவுக்கு புகார் வந்தது. 2009ம் ஆண்டு செப்டம்பரில் இந்த புகார் வந்தது. புகாருக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்பதால் கட்சியின் நடைமுறை விதிப்படி, மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பது என மாநிலக்குழு முடிவு செய்தது. இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்ற மூவருமே மாநிலக்குழு உறுப்பினர்கள். அவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் கன்வீனராக செயல்பட்டார். மற்றொரு உறுப்பினர் மாநில செயற்குழு உறுப்பினர்.


விசாரணைக்குப் பிறகு அந்தக்குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25ந் தேதி நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில், உ.ரா.வரதராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு பரிந்துரைத்தது. ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்ற அடிப்படை யில், உ.ரா.வரதராசன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கட்சி நடைமுறையின்படி மாநிலக்குழு கூட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு விசாரணைக் குழுவின் கண்டறிதல்களை மாநிலக்குழு ஏற்றுக்கொண்டதோடு உ.ரா.வரதராசன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


உ.ரா.வரதராசன் கட்சியின் உயர் நிலைக்குழுவான மத்தியக்குழுவில் அங்கம் வகித்த நிலையில், கட்சியின் மாநிலக் குழு முடிவு எடுக்க இயலாது. கட்சி விதிகளின்படி, மாநிலக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை நடவடிக்கைக்காக மத்தியக்குழுவிற்கு அனுப்பியது.



கொல்கத்தாவில் 2010 பிப்ரவரி 4-6 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் அறிக்கை மற்றும் தீர்மானம், இந்தப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரா.வரதராசன் தனது நிலையை விளக்கி அனுப்பிய கடிதம் ஆகியவை மத்தியக்குழு உறுப்பி னர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது. (உ.ரா.வ.வின் கடிதத்தின் சில பகுதிகள் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன)

இந்த விசயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உ.ரா.வரதராசன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பிறகு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநிலக்குழுவின் பரிந்துரையை அங்கீகரிப்பது என்று மத்தியக்குழு முடிவு செய்தது. கூட்டத்தில் பங்கேற்ற 74 மத்தியக் குழு உறுப்பினர்களில் யாரும் இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆட்சேபிக்கவில்லை. வாக்கெடுப்பின்போது ஐந்து உறுப்பினர்கள், வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மத்தியக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு விற்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்தப்போவதாகவும் உ.ரா.வரதராசன் தெரிவித்தார்.


மேற்கூறப்பட்ட வகையில்தான் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கட்சி உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் ஊடகங்களில், திட்டமிட்ட முறையில் பரப்பப்படும் சில செய்திகளால் உண்மை நிலை திரித்துக்கூறப்படுகிறது.


பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் அரைகுறையான உண்மைகள் என்ன? உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து விரட்டப் பட்டார் என்பது அவதூறுகளில் ஒன்று. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளி யேற்றப்படவில்லை. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற ஒழுங்கு நட வடிக்கையின் பொருள், பொருத்தமான கட்சிக்குழுவில் அவர் இணைக்கப்படுவார் என்பதுதான். இதைப் பொறுத்த வரை பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழுவில் உ.ரா.வரதராசனை இணைத்துக் கொள்வது என்றும், தொழிற்சங்க அரங்கில் அவருக்கு பணி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது அல்லது வெளியேற்றுவது என்பதல்ல; உ.ரா.வரதராசன், தொடர்ந்து தனக்குள்ள திறனை பயன்படுத்தி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதே. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், தொடர்ந்து கட்சிப்பணியாற்றி தங்களது தவறுகளை சரிசெய்து கொண்டு கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.



கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை தான் ஒரு கட்சித்தலைவரை தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியுள்ளது என்று சித்தரிப்பது முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்ல, இந்த துயரமான நிகழ்வை பயன்படுத்தி கட்சியையும் அதன் தலைமையையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டதும் ஆகும். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கட்சி நடவடிக்கை எடுக் காமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டுகளை வெளிப் படையாக கூறியிருந்தால் அப்போது இதே ஊடகங்கள், தங்களது கட்சித் தலைவர் மீது ஒரு பெண் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பான புகாரை கண்டுகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுத்திருக்கும்.



நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்காத நிலையில், கட்சி “புரிந்துகொள்ள முடியாததாக” இருக்கிறது என்றும், இதற்கு முரண்பாடான வகையில் உ.ரா.வரதராசனை “வெளிப்படையாக அவமானப்படுத்தி” விட்டனர் என்றும் கட்சி மீது குற்றம் சாட்டப்படுகிறது. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படாத நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மத்தியக்குழு பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இதற்குக் காரணம் உ.ரா.வரதராசன், கட்சியில் தரப்படும் பொறுப்பை ஏற்று தனது பணியை ஆற்ற வேண்டும் என்பதே. தன்னுடைய ஊழியர்களை “வெளிப்படையாக அவமதிப்பதில்” மார்க்சிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கையில்லை. உ.ரா.வரதராசன் தன்னுடைய குறைபாடுகளை சரி செய்துகொண்டு தொடர்ந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற வகையிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



கட்சியின் ஸ்தாபனக்கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவத்தை இழிவுபடுத்துவதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. மத்தியத்துவம் மற்றும் எதேச்சதிகார அடிப்படையிலேயே உ.ரா.வரதராசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புனைந்துரைக்கப் படுகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கை யின்போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளே இந்த கூற்றில் உள்ள முரண் பாட்டை வெளிப்படுத்தும். அவர் நேரடியாக பணியாற்றிய மாநிலக்குழுதான் அவர் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை துவக்கியது. நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக் குழு வேண்டுகோள் விடுத்த பிறகுதான் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழு பிரச்சனையில் தலையிடுகிறது. ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதேச்சதிகாரமாக முடிவெடுக்கக் கூடாது என்ற ஜனநாயக நடைமுறையும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. முறையான விசாரணைக்குப்பிறகு சம்பந்தப்பட்ட தோழரை நேரடியாக அழைத்து அவரது கருத்தையும் நேரடியாக கேட்டபிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்.



உ.ரா.வரதராசனுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கையையும் கட்சி மேற் கொண்டுள்ள நெறிப்படுத்தும் இயக்கத்தையும் முடிச்சுபோடுவதற்கான முயற்சி யும் நடக்கிறது. உ.ரா.வரதராசன் சம்பந்தப்பட்ட விசயத்திற்கும் நெறிப்படுத்தும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் மத்தியக்குழு நெறிப்படுத்தும் ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன்பே, இந்த விசயம் தொடர்பான புகார் வந்துவிட்டது. நெறிப்படுத்தும் இயக்கத்தின் நோக்கம், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அதை சரி செய்வதே ஆகும். கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நட வடிக்கை எடுப்பது இதன் நோக்கமல்ல.




தன்னுடைய ஊழியர்களுக்கு குறிப்பாக தங்களுடைய முழு நேரத்தையும் வாழ்க்கையையும் கட்சிப்பணிக்காக ஒப்படைத்துள்ள ஊழியர்களுக்கு கம்யூ னிஸ்ட் கட்சி ஸ்தாபனம் அதிகபட்ச முன் னுரிமை அளிக்கிறது. தோழர்கள் தவறான நிர்ணயிப்புகளுக்கு வரும்போது அல்லது தவறிழைக்கும்போது, அவருடைய ஒட்டு மொத்த பங்களிப்பையும் கட்சி கவனத்தில் கொள்கிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது சம்பந்தப்பட்ட தோழர், தன்னுடைய தவறை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற முறையிலேயே அமைந்திருக்கும். இத்தகைய நடைமுறையில் பல்வேறுகட்ட நடவடிக்கை களுக்குப் பிறகு கடைசி கட்ட நடவடிக்கையாகவே கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்பது அமையும். உ.ரா.வரதராசன் விஷயத்தைப் பொறுத்தவரை அவர் தனது பிரச்சனையிலிருந்து மீண்டுவந்து கட்சிக்கும், இயக்கத்திற்கும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்றே கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அது நடைபெற வில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.”