Pages

Sunday, April 24, 2011

திருட்டுக்கு பஞ்சமில்லை



சமீபத்தில் ஒரு தொழிற்சங்க கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அங்கு கேள்விப்பட்ட ஒரு சுவாரசியமான பேச்சு இது.

மத்திய அரசின் ஜனஸ்ரீ பீமயோஜனா குழு காப்பீடு திட்டம் ஒன்று உள்ளது.  எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தும் இத்திட்டத்தில் முறைசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக சேரலாம். தொழிலாளி ஆண்டுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய அரசு தனது பங்காக 100 ரூபாய் செலுத்தும்.

தொழிலாளி இயற்கை மரணம் அடைந்தால் 35ஆயிரம் ரூபாயும், விபத்து மரணம் அடைந்தால் 70ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தொழிலாளர்களின் முதல் இரண்டு  குழந்தைகளின் கல்வி செலவுக்கு வருடத்திற்கு 1200 ரூபாய் போனசாக கிடைக்கும். இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஏன்?

வழக்கம் போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி., அந்த திட்டத்தில் புகுந்து விளையாடி விட்டார். அப்படி என்ன விளையாடி விட்டார்? ச்சே... ச்சே... நம்மூர் ஆள் போல் அவர் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லைதான். பீகார் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., யார் யாருக்க பிள்ளை குட்டிகள் இருக்கிறது என்று கணக்கெடுப்பு நடத்தினார். ஆயிரம் பேரை கண்டு பிடித்து அவர்களின் குடும்ப பட்டியலை வாங்கினார். அவர்களிடம் சில படிவங்களில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு நேராக எல்ஐசி அதிகாரியிடம் சென்றார். அந்த விண்ணப்பங்களுக்கு தலா 100 ரூபாய் வீதம் ஒரு லட்சம் ரூபாயை கட்டினார். அதிகாரி மிரண்டு போனார்.

அரசியல்வாதிக்குதான் (கொடுமை) கிரிமினல் மூளையாச்சே! எம்.பி., விடுவாரா?  20ஆயிரம் கொடுத்து அதிகாரி சரிகட்டினார். அவரும் கையெழுத்து போட்டார். காரியம் கனக்கச்சிதமாக முடிந்துவிட்டது. ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்து பிள்ளைக்கும் தலா 1200 ரூபாய் வீதம் 12லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். இதில் புறங்கையை நக்கின அதிகாரி மாட்டிக் கொண்டார்.

விளைவு? 100 விண்ணப்பித்தால் 30பேருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வேண்டும் என்று ஆணையை போட்டுவிட்டார்கள். அப்புறம் என்ன? இப்போது 30பேருக்கு கூட அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள்.