Pages

Monday, January 28, 2013


பூட்டு உள்ள இடத்தில்தான் திருடர்களும்




அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள். வாங்கிய புத்தகங்களைக் கொண்டு சென்று அழகாக அலமாரியில் அடுக்கி வைக்காமல் படிக்க வேண்டும். புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு கூடுதலாக சிந்திக்க வேண் டும். ஜப்பானில் உணவகங்களில்  உள்ள மேசைகளில் ட்ராவ் இருக்கும். அதில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உணவு பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அந்தப் புத்தகங்களை எடுத்துப் படிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள். சிறிது நேரத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்று அந்த நாட்டு அரசு சிந்திக்கிறது. இங்கு 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் குடித்து நேரத்தை வீணாக்கினாலும் அரசு கவலைப்படுவதே இல்லை. காலை 8 மணிக்கே சினிமா காட்டும் கிரிமினல் குற்றம் இங் குதான் நடைபெறுகிறது.


அமெரிக்காவின் உணவகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துச் சென்றும் படிக்கலாம். படித்த பிறகு எடுத்து வந்து வைத்தால் போதும். மாறாக அந்த மக்கள் எடுத்த புத்தகத்துடன் சேர்த்து, தாங்கள் படிக்கும் புத்தகத்தையும் கொண்டு வந்து வைத்து விட்டுச் செல்கிறார்கள். அங்கு புத்தக திருட்டு நடைபெறுவது இல்லை. பூட்டும் சாவியும் எங்கு உள்ளதோ அங்குதான் திருடர்கள் உலாவருகிறார்கள்.

உலகில் குழந்தைகள் பிறக்கிறார்கள். இந்தியாவில்தான் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிறக்கிறார்கள். அப்படித்தான் குழந்தைகளை வளர்க்கிறோம். இல்லை யென்றால் பெண் குழந்தைக்கு எவர் சில்வர் பொம்மை கேஸ் அடுப்பும், ஆண் குழந்தைகக்கு பொம்மை துப்பாக்கியும் வாங்கிக் கொடுப்போமா? நரி எந்த ஊரில் உட்கார்ந்து தந்திரம் செய்தது? நம்மிடம் உள்ள இழிவுகளை விலங்குகளின் மீதேற்றி குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள்.

வீட்டுப்பாடம் கொடுத்து குழந்தைகளின் மாலை நேரத்தை களவாடும் ஆசிரியர்கள் சொர்க்கத்திற்கு (!) போக மாட்டார்கள். வானவில்லை பார்க்காத, மாலை நேரத்து வானத்தை பார்க்காத குழந்தைகள் எப்படி இருக்கும்? அதிகாலை முதல் இரவு வரை படிப்பு பயிற்சி என்று குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். பின்னிரவில் தூங்கி அதிகாலை கனவுக்குள் செல்லும் குழந்தையை கதவை தட்டி எழுப்பி விடுகிறோம். இப்படி வளர்க்கிற குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்குமா? குழந்தைகள் மீது இவ்வாறு நிகழ்த்தப்படும் வன்முறை பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இணையானது.

ஒன்றோடு ஒன்று கலந்துபேசி, புதுப்புது வார்த்தைகளை கற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து, சமரசமாக, சமமாக பழக வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் என்ன நடக்கிறது? ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என்று பிரித்து வைக்கிறார்கள். ஏனெனில் மொழிக்கு கூட வர்ணாசிரமத்தை கற்றுக் கொடுத்த வர்கள் அல்லவா நாம்?

மனிதனுக்கு மனித நேயத்தை கற்றுக் கொடுப்பதுதான் இலக்கியம். அதிகாரத்தை, ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்பவன்தான் எழுத்தாளன், கலைஞன்.

( சென்னை புத்தகக் காட்சியில்  எழுத்தும் ஆயுதம்/எழுதுகோலும் ஆயுதம் எனும் தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியதிலிருந்து...)

பெண்கள் உலாவுகிறார்கள்


கிராமங்களில் பெண்கள் பிரசவித்தவுடன் உறவினர்கள் சுகப்பிரசவமா? இல்லை ஆயுத கேசா? என்பார்கள். அப்போதுதான் ஆயுதம் என்ற சொல் எனக்கு அறிமுகமானது. அப்போது ஆயுதம் என்பது பிரசவம் சம்பந்தப்பட்டது. மருத்துவம் சம்பந்தப்பட்டது என்று புரிந்து கொண்டேன். ஆனால் அந்த ஆயுதத்தை  தற்போது தப்புதப்பாக பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் எழுத்து என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி நம்மை அடிமையாக்கினான். நிலத்திற்கு பட்டா முறையை கொண்டு வந்தான். அதற்கு முன்பு வரை அனுபவ பாத்தியம்தான் இருந்தது. ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றேன். எல்லையில் நின்று எதை பாதுகாக்கிறோம்? விவசாயிகள், தொழிலாளிகளின் குழந்தைகள் யாரை? யார் சொத்தை பாதுகாக்கிறார்கள்? நமக்குத்தான் சொத்தே இல்லையே. ஆகவேதான் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு, எழுத்து எனும் ஆயுதத்தை ஏந்தி மக்களோடு பணியாற்றுகிறேன்.

பகத்சிங் வெடிகுண்டுக்கு இணையாக எழுத்தையும் கையாண்டார். காந்தி யங் இந்தியா பத்திரிகையில் நீங்கள் செல்லும் பாதை தவறானது; மக்கள் உங்களோடு இல்லை என்று எழுதினார். உங்களை நேராக மேடைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு நீங்கள் பேசுகிறீர்கள். கூட்டம் முடிந்ததும் சென்று விடுகிறீர்கள். மக்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நாங்கள் மக்களோடு மக்களாக கலந்து இருக்கிறோம். எங்களை தங்கள் வீடுகளில் வைத்து மக்கள்தான் பாதுகாக்கிறார்கள். உங்களை விட எங்களுக்கு மக்களைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று எழுத்தில் பதிலடி கொடுத்தான் பகத்சிங்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு எழுத்தும் தண்டனைதான் எழுதுகோலும் தண்டனைதான். பள்ளியில் படித்து வெளியே வருகிற குழந்தைகள் ஏன் எழுத்தை நேசிப் பதில்லை? அதற்கு நமது கல்வி முறையில் உள்ள கோளாறுதானே காரணம்? இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலேதானே இந்திய கல்விச் சட்டத்தையும் உருவாக்கினான். பிறகு அந்தக் கல்வி எப்படி இருக்கும்?

எப்போதும் சதா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களால் பதில்சொல்லி மாளாது. இது குழந்தைகளின் இயல்பு. அந்தக் குழந்தைகளை கொண்டு சென்று பள்ளியில் விடுகிறார்கள். அதன்பிறகு அந்தக் குழந்தைகள் கேள்வி கேட்க முடியாது. கேள்விக்கு பதில் மட்டும் சொல்கிறவர்களாக மாறுகிறார்கள். கேள்வி கேட்க தூண்டுவதற்கு மாறாக, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறவர்களை உருவாக்கிற இடமாக பள்ளிகள் உள்ளன. இதைவிடப் பெரிய வன்முறை இருக்க முடியுமா?

1947ல் நேரு உள்ளிட்டோர் பங்கேற்ற கல்வி மாநாட்டில் (சிம்போசியம்) எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பேசினார்களோ, அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். படிக்காதவர்கள் ஊழலுக்கு துணை போனதாக கேள்விப்பட்டதுண்டா? படித்தவர்கள்தான் அத்தனை ஊழல்களுக்கும் துணை நிற்கிறார்கள்; கோப்புகளில் கையெழுத்து போடுகிறார்கள். அநியாயத்தை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்கள் அப்படியான பள்ளியில் படித்தவர்கள். இங்கே சுரண்டலுக்கான ஆயுதமாக எழுத்து பயன்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக உள்ள அம்பேத்கர் சிலையாகத்தான் இந்திய சமூகத்தில் அறிமுகமாகி உள்ளார்; சிந்தனையாக அல்ல.அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார் என்றுதான் கற்பிக்கிறார்கள். மற்றவற்றை சொல்வதில்லை. இந்தியாவின் தலைசிறந்த அறிவாளி அவர். எல்லா சாதியினருக்கும் சேர்த்தே இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். ஆனால் தலித் தெருக்களில் மட்டும்தான் அவர் சிலையாக இருக்கிறார். அவர் எழுத்தாக, சிந்தனையாக நமக்கு அறிமுகமாகவே இல்லை. அதனால்தான், அவர் சாதி அமைப்பின் தலைவராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு பதிவாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் 10 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உடையா காரணம்? ஆண் மனம்தானே காரணம்? நமது பண்பாட்டில் ஆணை வீரனாக காட்டுகிறார்கள்; அறிவாளியாக காட்டுவதே இல்லை. ஒரு திரைப்படத்தில் கூட அறிவாளியை பெண் காதலிப்பது போல் காட்டுவதே இல்லை. ஆண் சிந்தனையின் வடிவாகவே பெண் உருவாக்கப்படுகிறாள்.

அறிமுகமே இல்லாத இருவரை திருமணம் முடிந்த அன்று இரவே முதலிரவுக்கு அனுப்புகிறார்கள். இதில்வேறு, அவர் மனம் கோணாதபடி நடந்துகொள் என்று அறிவுரை கூறுகிறார்கள். இதை விட அசிங்கம் எங்காவது நடக்குமா? பெண்களைப் பற்றி ஆண்களின் சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கிறது? தமிழகத்தில் அண்மையில் உருவாகி உள்ள 25 பெண் கவிஞர்கள், படைப்பாளிகள் ஆணாதிக்க சிந்தனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நாம் படிப்பதே இல்லை. பெண்ணை வெறும் உடம்பாக பார்க்கிறோம்.

பையன் எப்படி? என்று கேட்டால் பீடி, சிகரெட், தண்ணி, பொண்ணு எதுவும் கிடையாது. நல்ல பையன் என்கிறார்கள். பெண்ணை போதை வஸ்துகளின் வரிசையில் சமூகம் வைத்துள்ளது. ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடமும், ஊழியர்கள் சக பெண் ஊழியர்களிடத்திலும் தவறாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கிடையில்தான் பெண்கள் உலாவுகிறார்கள். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சித்திரத்தை குழந்தையிலேயே உணர்த்தி விடுகிறோம். எழுத்தை பெண்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதனை ஆண்களின் மனதை அறுவை சிகிச்சை செய்யும் ஆயுதமாக மாற்ற முடியும்.

எல்லோரும் சென்று வருகிற கழிப்பிடத்தை ஏன் நாங்கள் மட்டும் அள்ள வேண்டும்? எல்லா சாதியிலும் ஏழை இருக்கும் போது ஏன் அருந்ததியர்கள் மட்டும் மலத்தை அள்ள வேண்டும்? என்று அந்தச் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் கேட்கிறார்கள். எழுத்து அச்சமூகத்தை சேரும் போது அவர்கள் அமைப்பாக அணி திரண்டு கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் எழுத்துக்களை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

சமூக வெளியில் சாதி மறுப்பு, காதல் ஒப்புக் கொள்ளப்படுகிறது - நமது வீட்டில் நடக்காமல் அது அடுத்த வீட்டில் நடக்கும் வரை. எந்த எழுத்தும் நுழைய முடியாத கோட்டையாக குடும்பங்கள் உள்ளன. உணர்ச்சிப் பூர்வமாக உள்ள குடும்பங்கள் அறிவுப்பூர்வமாக இல்லை. வாசலுக்கு தண்ணி தெளித்து, கோலம் போட்டு, சமையல் செய்தால் அதை பார்த்து பிற ஆண்களும் செய்வார்கள் என்று நான் செய்கிறேன். மாறாக, சார் விதிவிலக்கா னவர் என்று  சொல்லிவிட்டு மற்ற ஆண்கள் சென்று விடுகிறார்கள்.

இந்த எழுத்து ஆதிக்க சாதிக்கும், ஆளும்வர்க்கத்திற்கும்,உலகமயத்திற்கும் பயன்படும் வரை அது வன்முறை ஆயுதமாக இருக்கும். உழைப்பாளிகள், பெண்கள், தலித் மக்கள், ஒடுக்கப்பட்டோருக்கு பயன்படும் போது அறுவை சிகிச்சை செய்யும் ஆயுதமாக மாறும்.

( சென்னை புத்தகக் காட்சியில்  எழுத்தும் ஆயுதம்/எழுதுகோலும் ஆயுதம் எனும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதிலிருந்து...)

விவசாயிகளும், தொழிலாளர்களும் தரும் ஆதரவுதான் மிகச்சிறந்த பாராட்டு
- செல்வராஜ்



இடதுசாரி எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கும் போது வழக்கம்போல் எழும் தரமற்ற விமர்சனங்களுக்கு தோல் நாவலும் தப்பவில்லை. கம்யூனிஸ்ட்டு கள் வர்க்கப் போராட்டத்தையும், சாதிப் போராட்டத்தையும் ஒருசேர நடத்தியதால் கிடைத்த வெற்றி, அதனால் உரு வான சமூக மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களின் விமர்சனங்களை புறந்தள்ளி இடதுசாரி இயக்க எழுத்தாளர்கள் புதிய புதிய படைப்புகளை தந்து கொண்டிருக்கின்றனர். இலக்கிய உலகில் புதிய தடம் பதித்து வலம் வருகின்றனர்.


இடதுசாரி எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்பை புறக்கணிக்க முடியாத நிலையிலேயே இத்தகைய விருதுகள் அவர்களை நோக்கி வருகின்றன. இதற்கு மணிமகுடமாக, தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் டி.செல்வராஜின் தோல் நாவல், 2012ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள நூல்களின் வரிசையில் 3வதாக சாகித்ய அகாடமி விருது பெறுகிற நூல் என்பது குறிப்பிட்டத்தக்கது.


இதனையொட்டி 36வது சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் டி.செல்வராஜூக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நூலை அறிமுகம் செய்த மதுரை காந்திகிராம் கிராமியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், "38 ஆண்டுகால அரசியல், சமூக, பொருளதார வரலாறு விரிவாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் எத்தகைய இன்னலுக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள் என்ப தையும், பரம்பரை அடிமையாக தோல் ஷாப்புகளில் பணியாற்றுவதையும் இது பதிவு செய்துள்ளது" என்றார்.


"கம்யூனிஸ்ட் இயக்கத்தவர் தலைமறைவு காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்த பதிவு தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவாக உள்ளது. அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களோடு மக்களாக கலந்து நின்று, சங்கத்தை ஏற்படுத்தி சிட்டுக்குருவிகளாக இருந்த தொழிலாளர்களை வல்லூறுகளாக மாற்றினார்கள் என்பதை மிகவும் நுட்பமாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சோசலிச எதார்த்த நாவல்" என்றார் அவர்.


"இடதுசாரிகளுக்கு விருது கிடைத்தாலே அது விமர்சனத்திற்குள்ளாகிறது. அதற்கேற்ப இடதுசாரிகள் தொடர்ந்து விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இடதுசாரி அமைப்புகளை தவிர்த்து வேறு அமைப்புகளில் எழுத்தாளர்கள் இல்லை. தேசிய, திராவிட இயக்கங்களுக்கு புதிதாக எழுத்தாளர்களை உருவாக்கும் சக்தி இல்லை; குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கின்ற ஒன்றிரண்டு எழுத்தாளர்களும் பழைய எழுத்தாளர்கள். புதிதாக சில கவிஞர்கள் இருக்கிறார்கள் அவ்வளவுதான். 50 வருட கால தொடர் போராட்டத்தினால் மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் விஞ்சும் வகையில் இடதுசாரி இயக்கம் தமிழகத்தில் புதிய நாவலாசிரியர்களை, சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை, படைப்பாளிகளை உருவாக்கி உள்ளது; உருவாக்கி வருகி றது. இதனை நிராகரிக்க முடியாமல் இடதுசாரி எழுத்தாளர்களை நோக்கி விருதுகள் வருகின்றன," என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத் தின் துணைத்தலைவர் சிகரம் ச.செந் தில்நாதன் பெருமிதத்தோடு கூறினார்.


"தோல் நாவல் இலக்கியம் இல்லையென்றால் எது இலக்கியம்? உண்மை களை எழுதினால் அது இலக்கியமில்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ் இலக்கியம் அனைத்துமே பிரச்சார வகை சார்ந்ததுதான். கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவையும் பிரச்சார இலக்கியம்தான். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை படைப்புகள் பிரச்சார வகை சார்ந்ததுதான். படைப்பு வெறும் பிரச்சாரமாக இல்லாமல், அது கலைவடி வம் பெற்றுள்ளதா?" என்றுதான் பார்க்க வேண்டும், என்றார்.


"வர்க்க அரசியலை பற்றி பேசுகிற இடதுசாரி படைப்பாளிகளுக்கு அழகியல் வேறு, அதனை எதிர்ப்பவர்களுக்கு உள்ள அழகியல் வேறு. நாவலின் முடிவில் பிராமணனான சங்கரன், வேறு சாதிப்பெண்ணான வடிவாம்பாளை திருமணம் செய்து கொள்வதோடு நாவலை முடித்திருக்கலாம். மாறாக, திருமணம் முடிந்த கையோடு சங்கரன் கைது செய்யப்படுகிறான். வடி வாம்பாளை சங்கரனின் தாயார் அணைத்துக் கொள்கிறாள். இதுதான் மார்க்சிய அழகியல். இது ஜெயமோகன் கும்பலுக்கு தெரியாது." என்றார் செந்தில்நாதன்.


சென்னை பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவர் பேரா.வீ.அரசு, "தமிழ்ப் புனைகதை வரலாற்றில் மிகச்சிறந்த நூல்களை டி.செல்வராஜ் படைத்துள் ளார் என்று புகழாரம் சூட்டினார். தமிழ் நாவல்களை பட்டியலிட்டால் அதில் வளமானதாக இடதுசாரி எழுத்தாளர்களின் நாவல்கள் இருக்கும். இடதுசாரி படைப்பாளிகள் உருவாக்கி வரும் புனைகதை மரபு முற்றிலும் வேறானதாக இருக்கிறது. தொ.மு.சி.ரகுநாதன் தனது நாவலுக்கு நெசவு தொழிலாளியை தேர்ந்தெடுத்தது சாதாரண நிகழ்வல்ல. அதே போன்று இடதுசாரிகள் தோல் தொழிலாளர்களுடன் கொண்டிருந்த ஆத்மார்த்தமான உறவு முதன்முதலில் நாவலாக வந்துள்ளது. விவசாய தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்த மலரும் சருகும் நாவலுக்கு சற்றும் குறைவு இல்லாமல் தோல் நாவல் வந்துள்ளது" என்றார்.


"இந்த நாவல் தோல் தொழிலாளர் களை பற்றி மட்டுமே பேசுகிறது. சாதியாக வாழும் மக்கள் வர்க்கமாக திரள்கிறார்கள். மத வேறுபாடுகளை கடந்து நிற் கிறார்கள். ஒடுக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பெண்களின் வெளிப்பாடுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். சாதியம் சார்ந்த கருத்து முன் நிற்கிறதா? வர்க்கம் சார்ந்த கருத்து முன் நிற்கிறதா? என்று விவாதிக்க வேண்டும். புதிய புனைவுகளையும், போராளிகளையும் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று உணர்ந்து பதிவு செய்திருக்கிறார்" என்றும் வீ.அரசு கூறி னார்.


"கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கமும் சாதியும் இணைந்த புள்ளியில் நடத்திய போராட்டங்கள்தான் வெற்றியை பெற்றுத் தந்துள்ளன என்று குறிப்பிட்ட ஆய்வாளர் வ.கீதா நாவல் ஏற்படுத்தியுள்ள காத்திரமான விளைவுகளையும், கனமான விமர்சனங்களையும் முன்வைத்தார். "இந்திய சுதந்திரத்தின் மாய்மாலங்களை வெளிப்படுத்துவதாக இந்த நாவலை நாம் பார்க்கலாம். ஹரிஜன சேவாசங்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றை அணைத்துக் கொண்டு சென்ற தன்மையை இதில் காண முடிகிறது. இந்தப் புதினத்தில் வரும் கிருத்தவர்கள் உயிர்த் தெழுதல் தத்துவத்தையும், கம்யூனிச தத்துவத்தையும் இணைத்துக் கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் மத உணர்வு வேறு; திருச்சபை பணியாளர்களின் மனநிலை வேறு என்பதை இந்நா வல் தெளிவுபடுத்துகிறது," என்றும் அவர் கூறினார்.


"ஓசேப்பு என்றபாத்திரம் ஒரு கழிப் பறையில் ஒளிந்து கொள்கிறான். அதனை ஒரு பன்றியும் பகிர்ந்து கொள்கிறது என்ற நாவலின் பகுதி மலம், அழுக்கு என்ப தன் மீதான கருத்தியல் என்ன? இவற் றோடு உழலும் மக்களின வாழ்க்கை முறை என்ன என்பதைப் புதினம் கட்டுகிறது. இந்த நாவலின் பெண் பாத்திரங்கள் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டி யவை. ஒருவனால் ஏமாற்றப்பட்டு குழந் தைக்குத் தாயும் ஆன ஒரு பெண் இன் னொருவனோடு வாழ்க்கை நடத்துவது போன்ற பாத்திரப் படைப்பிலும் பெண்க ளின் மாண்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் நாவலாசிரியர் டி. செல்வராஜ்" என்று வ.கீதா புகழ்ந்துரைத்தார்.


"தொழிற்சங்கங்கள் வெறும் கூலி உயர்வுக்காக மட்டும் போராடுபவை அல்ல; சமூக மாற்றத்திற்கான போராட்டத்தையும் நடத்தக் கூடியவை. தோல் நாவலில் வரும் பாத்திரங்கள் கற்பனையானவை அல்ல. உயிரோடு வாழ்ந்து, மக்களோடு இணைந்து நின்ற களப்போராளிகள். தோல் பதனிடும் தொழிலாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்தார்கள், எத்தகைய சுரண்டலுக்கு உள்ளானார்கள் என்பதை இந்நாவலின் வழியாக வாசகர்கள் உணர முடியும். இது திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறாக இல்லாமல் தமிழகத்தின் வரலாறாகவும் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உரு வான தொழிலாளர் ஒற்றுமை ஒட்டு மொத்த சமூகத்திலும் மாற்றத்தை உரு வாக்கியது" என்று இந்திய கம்யூனிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவருமான ஆர்.நல்லகண்ணு கூறினார்.


"என்ன சாதி, எந்த பிரிவு என்றெல் லாம் கேட்கிறார்கள். இதனை கேட்கவே வெட்கமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் அதை வெளியே சொல்வதில்லை. பெருமைப்பட்டுக் கொள்வதுமில்லை. அது சமூக மாற்றத்திற்கானது என்று செய்கிறார்கள். தற்போதைய சூழலில் வேறுவழியின்றி சொல்கிறேன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, நான் உட்பட பெரும்பாலானோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வர்கள்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் தேவர் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெண்ணைத்தான், தலித்தான டி.செல்வ ராஜூக்கு பேசி திருமணம் செய்து வைத் தோம். அவர்கள் நன்றாகத்தான் வாழ்கி றார்கள். நாங்களும் நன்றாகத்தான் உள் ளோம்.  கட்டாயப்படுத்தி திருமணம் செய் வது தவறு; காதலிப்பவர்களின் திரும ணத்தைத் தடுத்து நிறுத்த எவருக்கும் உரிமை கிடையாது." என்றும் நல்லகண்ணு கூறினார்.


ஏற்புரை நிகழ்த்திய டி.செல்வராஜ், "60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதுவதை யாரும் பிரசுரிக்க மாட்டார்கள். நவீனத்து வம், பின் நவீனத்துவம் என புதுசுபுதுசாக சொல்கிறார்கள். மக்களுக்கு பயன்படாத அதெல்லாம் சமூகத்தில் நிற்காது, என் றார். தமிழக அரசின் விருதையும், சாகித்ய அகாடமியின் விருதையும் ஒருசேர பெற்ற தோல் நாவல் குறித்து அவர் பேசு கையில், பரிசுக்காக நாவல் எழுத வில்லை. எனது அரசியல் கருத்தை நிலை நாட்டத்தான் எழுதினேன். பரிசு வேண் டுமென்று நினைத்திருந்தால் சாமியார் காலிலோ அல்லது அரசியல்வாதிகளின் காலிலோ சென்று விழுந்திருப்பேன். சமூகத்தை மாற்ற போராடும் விவசாயிகளும், தொழிலாளர்களும் தரும் ஆதரவுதான் மிகச்சிறந்த பரிசு" என்றார்.


"முற்போக்கு எழுத்தாளர்கள் நடத் திய 60ஆண்டு கால போராட்டத்தின் விளைவாகத்தான் தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள் ளது. பல இளம் எழுத்தாளர்கள் இடது சாரி முகாமில் எழுதுகின்றனர். ஒடுக்கப் பட்ட இஸ்லாமியர்கள், பெண்கள் பற்றி அதிக அளவில் எழுதுகிறார்கள். அடுத்த டுத்து வரவிருக்கிற விருதுகள் அனைத் தும் முற்போக்கு முகாமை நோக்கியே வரும். அந்த அளவுக்கு சிறந்த படைப்பு கள் வந்து கொண்டிருக்கின்றன" என்றார் செல்வராஜ்.

தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு விரைவாக நகர்த்திச் செல்லும் பணியை இடதுசாரி எழுத்தாளர்கள் தொடங்கி, தற்போது அதனை அதிவேகத்தில் செய்து வருகின்றனர் என்பதையும் இந்நிகழ்வு பறைசாற்றியது.