Pages

Monday, March 15, 2010

உணவுப்படி உயருமா?

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 1206 பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.


இந்த விடுதிகள் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி காணப்படுகின்றன.இவற்றை சரி செய்ய வேண்டிய அதிகாரிகளும், அரசு எந்திரமும் தூங்கி வழிகிறது.


இந்த கடுமையான விலைவாசி உயர்விலும் பள்ளி மாணவனுக்கு நாளொன்றுக்கு 15ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 18 ரூபாயும் உணவுப்படியாக கொடுக்கிறது. இந்த தொகை மாணவர்களின் உணவு தேவையில் 25சதவீதத்தை கூட பூர்த்தி செய்யாயது என்பது சாதாரணமாக தெரிகிறது.


ஆகவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும். தரமான ஊட்டச்சத்துள்ள உணவினை உணவுப்பட்டியல்படி வழங்க வேண்டும். விடுதிகளில் சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விடுதியில் இடம் கிடைக்கும் வகையில் புதிய விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையல்லவா?

 
முதுநிலை மாணவர்களுக்கு விடுதியில் இடம் கொடுக்க நிலை நீடிப்பது எப்படி முறையாகும்? இன்னும் கொடுமை என்னவெனில் பல விடுதிகளில் சமையலர், உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளது. இதனை செய்யாமல் எப்படி மாணவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். படிப்பதற்கான சூழ்நிலை எப்படி உருவாகும்.

சாதிய உணர்வோடு செயல்படும் ஓவியக்கல்லூரி முதல்வர்

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இங்கு 15பேர் மட்டுமே உள்ளனர். இதனால் முன்னாள் மாணவர்கள் இலவசமாக வகுப்பெடுக்கின்றனர்.


இக்கல்லூரியில் முதுநிலை பயிலும் மாணவர் சசிக்குமார், திருக்குறளை சுடுமண் சிற்பமாக வடித்து உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் வைக்க திட்டமிட்டார். இதற்காக கல்லூரி முதல்வர் மனோகரனை அணுகியுள்ளார். கல்லூரி நிதியில் இருந்து பணம் வழங்க மறுத்த அவர், சொந்த செலவில் மூலப்பொருட்களை வாங்கிக் கொள்வதோடு, கல்லூரி வளாகத்திலேயே சூளையை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இச்செலவினங்களுக்கான தொகையை பின்னர் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.



இதனையடுத்து சக மாணவர்களின் உதவியோடு சுடுமண் சிற்பத்தை தயாரிக்கும் பணியில் சசிக்குமார் ஈடுபட்டார். 1330 குறளுக்கான சிற்பத்தையும் செய்து கொண்டே அவற்றை சூளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வப்போது கல்லூரி முதல்வரை சந்தித்து சசிக்குமார் பணம் கேட்டு வந்துள்ளார்.



இச்சூழ்நிலையில் சில விஷமிகள் மனோகரனின் காரை சேதப்படுத்தியுள்ளனர். அதனை சசிக்குமார் செய்ததாகவும், அவரை முன்னாள் மாணவர்கள் யஷ்வந்திரன், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டுள்ளார் என்று மனோகரன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


இதனையறிந்த சசிக்குமார், கமலஹாசன் ஆகியோர் தலைமறைவாகினர். யஷ்வந்திரனையும், அவரது தம்பியையும் அடித்து இழுத்து சென்ற போலீசார், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து சாதி பெயரை கூறி திட்டியதோடு பூட்ஸ் காலால் மிதித்து சித்தரவதை செய்துள்ளனர். மறுநாள் சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த சம்பவங்களின் விளைவாக சசிக்குமார் செய்து வைத்திருந்த 300க்கும் மேற்பட்ட சிற்பங்கள் சூளையிடாததால் உடைந்துவிட்டன. ஒரு சிற்பம் தயாரிக்க குறைந்தது 3மணி நேரம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


“யஷ்வந்திரன், கமலஹாசன் ஆகியோர் தலித் மாணவர்கள் என்பதற்காகவும், சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கூறியதற்காகவும் காழ்ப்புணர்ச்சியோடு மனோகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்” என்று மாணவர்கள் கூறினர்.

 
இதனைக் கண்டித்து மார்ச்-9 அன்று எழும்பூரில் மாணவர்கள் கண்டனக் கூட்டம் நடத்தினர். இதில், சாதிய உணர்வோடு செயல்படும் கல்லூரி முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்

வாரிசு சான்றிதழ் ரூ.2000 - வட்டாட்சியர் அலுவலகத்தில் அமோக விற்பனை

கிண்டி-மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகம் கே.கே.நகரில் செயல்பட்ட வருகிறது.


இதன் கீழ் வேளச்சேரி, அடையார், கிண்டி, காணகம், ஈக்காடுதாங்கல், மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, நெசப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.


இந்த அலுவலகத்தில் வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, வாரிசு சான்று ஆகியவற்றை பெறுவது குதிரைக்கொம்பாகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் வெதும்புகின்றனர்.


15 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழும்,7நாட்களுக்குள் இதர சான்றிதழ்களும் வழங்கப்படும் என்ற அரசாங்க அறிவிப்பு பலகையில் உள்ளது. ஆனால், அந்த அறிவிப்பை அங்குள்ள அதிகாரிகள் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை.


சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் வாரத்திற்கு 3நாட்கள் வீதம் பல மாதங்களுக்கு அலைகழிக்கின்றனர். மனு தொலைந்து விட்டது என்று கூறி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கச் சொல்கின்றனர். (தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோரும்போது மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடாம்!) அப்போதும் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.


புரோக்கர்கள் மூலமாக சென்றால் 3நாட்களில் அனைத்து விதமான சான்றிதழ்களும் கிடைக்கின்றன. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை விட புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கியதற்காக நிலஅளவையர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி 9வது மண்டலம் 131வது வட்டத்தில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதி உள்ளது. இங்கு ஜஹவர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் வீடுகளாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக முதற்கட்டமாக 29 பயனாளிகளையும், இரண்டாம் கட்டமாக 42பயனாளிகளையும் மாநகராட்சி தேர்வுசெய்துள்ளது.


இந்த பகுதிகளில் உள்ள பயனாளிகள் வாரிசு, வருமான சான்றிதழ் ஆகியவற்றை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக விண்ணப்பித்தவர்களை வட்டாட்சியரும், வருவாய் ஆய்வாளரும் அலைகழித்து வருகின்றார்களாம்.


அன்னை சத்யா நகரில் குடியிருக்கும் வி.சிவபூசணம் (வயது 65) பூ விற்பவர். வாரிசு சான்றிதழ் கோரி 9-11-09அன்று விண்ணப்பித்த அவருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. “ஒரு நாள் முழுக்க பூ விற்றால் 50ரூபாய் கிடைக்கும். என்கிட்டப்போய் 2ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். என்னோட மொத்த மாச வருமான ரூ.1500தான். அவ்வளவு பணத்தை எப்படி நான் கொடுக்க முடியும்?” என்கிறார் அவர்.


3வருடமாக அலைந்தும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்காத விஜயா, 2ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். தனது மகளின் திருமணத்திற்கு அரசு உதவி பெறுவதற்காக 3 மாதங்களுக்கு முன்பு வருமானச்சான்று கோரி விண்ணப்பித்தார். அங்குள்ளவர்கள் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டார்களாம். அதனை கொடுக்காததால் அவரும் சான்றிதழ் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.


இதேபகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். 10மாத போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பிறகு 1500ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் சான்றிதழ் பெற்றுள்ளார்.

 
இவர்களைப் போன்று நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். சட்டப்படி தந்தாகவேண்டிய சான்றிதழ், இப்படி வியாபாரச் சரக்காக மாற்றப்பட்டிருப்பது தொடர்கிறது.