Pages

Tuesday, April 20, 2010

மறைமலை அடிகள் நினைவு இல்லம் ரூ.15லட்சம் செலவில் புதுப்பிப்பு

புறக்கணிக்கப்பட்டிருந்த மறைமலையடிகள் நினைவில்லத்தை புதுப்பிக்க, தீக்கதிர் செய்தியையடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


சென்னையடுத்த பல்லாவரத்தில் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம், மறைமலை அடிகளார் கலை மன்றமாக செயல்பட்டு வருகிறது, இதன் நிர்வாக பராமரிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது குறித்தும், கடந்த 15ஆண்டுகளாக அந்த கட்டிடத்திற்கு சுண்ணாம்பு கூட அடிக்காமல் இருப்பது குறித்தும், இதனால் கட்டிடம் பாழடைந்து கிடப்பது பற்றியும் தீக்கதிர் ஏப்.12 இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த சூழலிலாவது அந்த இல்லத்தை அரசே ஏற்று தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே என்ற கருத்தும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியின் பின்னணியில் காஞ்சி மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அந்த நினைவில்லத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு திங்களன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மறைமலை அடிகளார் நினைவு இல்லம் தற்போது தென்னிந்திய தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பில் உள்ளது. இக்கட்டிடம் 1914ம் ஆண்டில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்தநிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மறைமலை அடிகள் நினைவு இல்லத்தை பழுதுபார்ப்பதற்கு தென்னிந்திய தமிழ்ச்சங்கம் என்ற நிறுவனத்திற்கு 15லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். அத்தொகையை பொதுப்பணித்துறைக்கு அளித்து, அத்துறை மூலம் வைப்புத் தொகைப் பணியாக மறைமலை அடிகளார் நினைவு இல்லம் பழுதுபார்த்து சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். பழுதுபார்ப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

அடை மழை said...

வாழ்த்துகள்
nanba.. un pani thodarattum