Pages

Friday, October 22, 2010

ஊழியர்களையும் கழிவாக கருதுகிறதோ?

சென்னை நகரத்தில் உள்ள பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்து, மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் அளப்பரிய செயலை செய்து வருபவர்கள் கழிவு நீர் அகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களை அரசு வெறும் கழிவாகவே நினைக்கிறதோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.



சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது என சட்டம் இருந்தாலும் நடைமுறையில் அமலாகாத நிலைதான் உள்ளது.


மழை, வெயில் என பொருட்படுத்தாமல் குடிநீர் விநியோகம், குடிநீர் பாராமரிப்பு, குடிநீர் இணைப்பு, குடிநீர் பழுதுபார்ப்பு, பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் என கடுமையாக உழைக்கின்றனர். இதனால் இளந்தொழிலாளர்கள் உடல் தோற்றம் மாறி, பல்வேறு விதமான நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 130ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது.


இவர்களுக்கு அடையாள அட்டை, பாதுகாப்பு சாதனங்கள், சம்பத்துடன் கூடிய விடுப்பு, பி.எப், இஎஸ்ஐ, சம்பளச்சீட்டு என எந்த சட்ட உரிமையையும் நிர்வாகம் வழங்காமல் உள்ளது; வேலை செய்வதற்கான எந்த அத்தாட்சியும் இல்லாமல், தொழிலாளர் என்ற சட்ட அங்கீகாரம் கூட இன்றி உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 300ரூபாய் கூலி வழங்க வேண்டும். 8மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். பண்டிகை, அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். சம்பளச்சீட்டு வழங்க வேண்டும்.


இலவச மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சீருடை, பணி செய்வதற்கான உபகரணங்களை வழங்க வேண்டும். பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைவருக்கும் போன, கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடினாலும் அரசு பாராபட்சமாகவே நடத்துகிறது.


தீபாவளி பண்டிகையையொட்டி அரசுத்துறை நிறுவனமான மின்சார வாரியம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் போன வழங்கி உள்ளது. அந்த அளவிற்கு கூட இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.
 
 
இந்த நிலை மாறுமா? இவர்களையும் தொழிலாளர்களாக நினைத்து அரசு போன வழங்குமா? இந்த தொழிலாளர்களுக்கு 12லட்சம் ரூபாய் செலவிட அரசு தயங்குவது ஏன்?

1 comment:

anujanya said...

நாமெல்லாம் மனிதர்கள் தாமா என்று எரிச்சல் வருகிறது. அந்தப் புகைப்படமே மனதை நிறைய துன்புறுத்துகிறது.

அனுஜன்யா