Pages

Monday, June 17, 2013

மக்கள் சேவையை மறுக்கும் அரசு மருத்துவமனை

வலியோடும், வேதனையோடும் ஓடி வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனை, அவர்களை தனியார் மருத்துவ மனைகளை நோக்கி விரட்டி அடிக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை.மக்கள் சேவையாக இருந்த மருத்துவம், தற்போது பெரும் வியாபாரமாக் கப்பட்டு, லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

 மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்திற்கென்று 2.1 விழுக்காடு தொகை ஒதுக்கியது மாறி, தற்போது 1.3 விழுக்காடு நிதியையே ஒதுக்குகிறது. இதனை மாநில அரசும் பின்பற்றுகிறது.இதன்காரணமாக அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படாமல், திட்ட மிட்டு சீரழிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு துரத்தப்படுகின்றனர்; தேவையற்ற அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அதற்கு ஒரு உதாரணமாக கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது.

சென்னை மாநகரத்தின் வளர்ச்சியை யொட்டி 1979ம் ஆண்டு கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனை தொடங்கப்பட்டது. மத்திய சென்னை, தென்சென்னை பகுதி மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் புறநகர் மருத்துவமனைக்கு கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், சின்மயா நகர், வடபழனி, மேற்கு மாம்பலம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம், போரூர் என சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

 இந்த மருத்துவமனை உருவான போது சுமார் 3 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 10 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கேற்ப மருத்துவமனையின் விரிவாக்கமும், தரமும், சிகிச்சையும் மாறவில்லை. மாறாக, அந்தப்பகுதியில் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

11 ஏக்கர் பரப்பளவு கொண்ட மருத்து வமனை இடத்தில், கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தனியார் ஆக்கிரமிப்பு போக தற்போது 5.5 ஏக்கர் நிலம்தான் உள்ளது.இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், இந்த நில ஆக்கிரமிப்பு பற்றி மருத்துவமனை நிர்வாகம் இது வரை புகார் செய்யாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை.?

மருத்துவமனையின் பரப்பளவு சுருங்கியது போன்றே, மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவையும் குறைந்து விட்டது. அவசர சிகிச்சைக்கு வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாறாக, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், சென்ட்ரல் பொது மருத்துவமனைக்கு துரத்திவிடும் வேலையை கே.கே.நகர் மருத்துவமனை செய்கிறது.

இதன் பொருள் என்ன? போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் நீண்ட தூரம் மக்கள் செல்லமாட்டார்கள். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வார்கள் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மருத்துவமனையின் தற்போதைய நிலை:

இந்த மருத்துவமனையில் 15 மருத்துவர்கள், 20 நர்சுகள், மருந்தாளுனர்கள் என ஏராளமான ஊழியர்கள் உள்ளனர். மகப்பேறு சிகிச்சை பிரிவு, கண் குறைபாடுகளை கண்டறிவதற்கான பிரிவு, பல் சொத்தை மற்றும் அது சார்ந்த நோய்கள் கண்டறியும் பிரிவுகளும், இவற்றிற்கான கருவிகளும் உள்ளன. அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி, 100 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் படுக்கை வசதி, உள் நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுக்கும் சமையலறை, அதற்கான பணியாளர்களும் உள்ளனர். 

இத்தகைய வசதிகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தி தரமான சிகிச்சை அளிப்பதில்லை. “வரும் ஆனால் வராது என்பது போல மருத்துவமனை உண்டு ஆனால் சிகிச்சை கிடையாது” என்கிற நிலையில் மருத்துவமனை செயல்படுகிறது. 100 படுக்கைகள் இருந்தாலும் 25க்கு மேற்பட்ட நோயாளிகளை அனு மதிப்பதில்லை.

சிறப்பு மருத்துவமனை: 
சென்னையில் கே.கே.நகரில் உள்ளது போன்றே அண்ணாநகரில் ஒரு புறநகர் மருத்துவமனை உள்ளது. அது குடல் நோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. அதுபோன்று, இந்த மருத்துவமனையை எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சைக்கான சிறப்பு மருத்தவமனையாக தரம் உயர்த்த 2009ம் ஆண்டு தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் ஏனோ அத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மருத்துவமனையை சுற்றியுள்ள மக்கள் பெரும்பகுதியினர் உடலுழைப்பு தொழி லாளர்களாக உள்ளனர். 

அதிலும், குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த வளாகத்தில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை துவங்க முடியும். காய்ச்சல், சளி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்களுக்கு மட்டும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்குத் தான் இந்த மருத்துவமனை உள்ளது என்ற நிலையை மாற்றி இங்குள்ள உள்ள உபகரணங்களை, வசதிகளை பயன் படுத்தினாலே பலவகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க இயலும்.

500 படுக்கை வசதி தேவை:
இந்த அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கும் அதிகமானோர் புறநோயாளி களாக வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் உடலு ழைப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 500படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்தினால், சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வசதி பெருகும்.

இதனால் மருத்துவச் செலவு குறையும்.24 மணி நேர சிகிச்சை: காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே புற நோயாளிகளுக்கு ஒருசில டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மதியத்திற்கு மேல்வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இதனால் அவர் கள் தனியார் மருத்துவமனையை நோக்கி செல்கின்றனர். அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது

.மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு என்று பெயர் பலகை இருந்தாலும், அவசர சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு முதலுதவி கொடுத்து அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்ற னர். இவற்றை மாற்றி, தற்போது உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் களை சுழற்சி முறையில் (ஷிப்ட்) பணி யாற்ற செயல்வதன் மூலம் 24 மணி நேர மும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலும். மேலும் மருந்து மாத்திரைகளை யும் வழங்க முடியும்.

மகப்பேறு சிகிச்சை:
மாநகராட்சி மருத்துவமனைகளில் வருடத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான பிரசவங்கள் நிகழ்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆண்டுக்கு நூற்றுக்கும் குறையாமல் பிரசவங்கள் நிகழ்கின்றன. ஆனால் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களை மையப்படுத்தி உள்ள இந்த மருத்துவ மனையில் 3 மகப்பேறு மருத்துவர்கள், பிரசவ வார்டு இருந்தும் வருடத்திற்கு 10க்கும் குறைவாகவே பிரசவம் நிகழ்கி றது. இதற்குக் காரணம் மருத்துவர்கள் குறைபாடா? மருத்துவமனையின் குறை பாடா? அதனைக் கண்டறிந்து பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்க முடியாதா?

குழந்தை சிகிச்சை:
மருத்துவ மனையின் இணையதளத்தில் குழந்தை களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான சிகிச்சை அளிப்பதில்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு மருந்துவர்களை நியமிக்கவும், குழந்தை களுக்கான தடுப்பு ஊசிகள் போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாத ஆம்புலன்சுக்கு ஷெட்: கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற வற்றிற்காக கருவிகள் இருந்தும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அவற்றை முறையாக பயன்படுத்தி சிகிச்சை அளிக்க இயலாத நிலை உள்ளது. தற்போது மருத் துவமனையில் உள்ள உபகரணங்களை பயன்படுத்த ஊழியர்களை நியமிப்பதன் மூலம் மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க இயலும்.உள் நோயாளிகளாக சிகிச்சை பெறு கிறவர்களுக்கு உணவுகளை சமைத்து கொடுக்க போதிய வசதி உள்ளது.

ஆனால், நோயாளிகள் வெளியில் இருந்து உணவு வாங்கி உண்ண வேண்டிய நிலையே உள் ளது. அப்படியானால் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் உணவுப் பொருட்கள் எங்கே போகிறது?மருத்துவமனைக்கென்று தனியாக ஆம்புலன்ஸ் இல்லை. இல்லாத ஆம் புலன்சுக்கு 4 லட்சம் ரூபாய் செலவில் ஷெட் அமைத்துள்ளனர். அதில் காண்ட் ராக்டர்கள் தங்கள் உபகரணங்களை போட்டு வைத்துள்ளனர்.

பெயர் பலகை கூட இல்லை:
கே.கே. நகர் புறநகர் மருத்துவமனையையொட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனையும் செயல் படுகிறது. இங்கு அரசு பொது மருத்துவ மனை உள்ளது என்பது தெரியும் வகை யில் மருத்துவமனை முகப்பில் ஒரு பெயர் பலகை இல்லை.மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்கள், புகார் தெரி விக்கும் எண், லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண், உள்ளூர் காவல் நிலைய தொலைபேசி எண் போன்ற விவ ரங்கள் கூட இல்லாத நிலை உள்ளது.மருத்துவமனையின் பராமரிப்பு பணி களுக்காக அரசு ஒதுக்கீடு செய்த பணம், முழுமையாக முறையாக, தேவையான பணி களுக்கு செலவிடப் பட்டுள்ளதா என அரசு விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், இப்பணிகளுக்கான ஒப்பந்தங் கள் வெளிப்படைத் தன்மையுடையதாய் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டால் அது தனியார் மருத் துவமனைகளின் கொள்ளை லாபத்திற்கு வேட்டு வைப்பதாக அமையும். ஆகவே, தனியார் மருத்துவமனை முதலாளிகள் அரசு மருத்துவமனையை மேம்படுத்த விடாமல் நெருக்கடி கொடுத்து வருகின் றனர். அதற்கு இந்த கே.கே.நகர் மருத்துவ மனையும் விதிவிலக்கல்ல.இன்றைக்கு கல்விக்கும், மருத்துவத் திற்கும் மக்கள் பெருமளவில் செலவிடு கின்றனர்.

ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் இவற்றை தனியார்மயமாக்குவதில் போட்டிப்போட்டுக் கொண்டு செயல்படு கின்றன. அதன்விளைவு மக்களின் வாழ்க்கை நிலை மேலும் மேலும் வறு மையை நோக்கி சென்று கொண்டிருக் கிறது. அரசு மருத்துவமனைகளை நம்பித் தான் ஏழை மக்களின் வாழ்க்கை உள் ளது என்பதை அரசு மற்றும் மருத்துவ மனை நிர்வாகமும், மருத்துவர்களும் உணர்ந்து, நோயாளிகளை மனித நேயத் துடன் அணுக வேண்டும்; உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதனை அரசு உத் தரவாதப்படுத்த வேண்டும்
மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்

சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான  விருது பெற்ற மலர்வதியின் தூப்புக்காரி நாவலையும், கவிஞர் ஆசு-வின் அம்மாக்கள் வாழ்ந்த தெரு என்ற சிறுகதைத் தொகுப்பையும் முன் வைத்து  சென்னையில் ஆய்வரங்கு நடைபெற்றது.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்- கூட்டாஞ்சோறு அரங்கு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது. தூப்புக்காரி குறித்த ஆய்வை முன்வைத்த இலக்கிய விமர்சகர் எஸ்.வி.வேணுகோபால், நுட்பமான உள்ளடுக்குகள் நிரம்பியதாக இது உள்ளது. குமரி பகுதியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட வேலை என்றில்லாமல் எல்லா வேலைக்கும் செல்வார்கள். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களும் துப்புரவு வேலைக்கு செல்வார்கள் என்றால் சாதி ஆதிக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? திருமண உறவின் போதுதான் என்பதை நாவல் பேசுகிறது. மீண்டும் மீண்டும் அழுக்கோடும் மலத்தோடும் வாழும்  தூப்புக்காரி வாழ்க்கையில் குளிப்பதும், சுத்தமாக இருப்பதும் எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பினார்.


குடும்ப வறுமை, கடன் தொல்லையில் காதலன் வீட்டிலேயே எச்சில் இலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் பூவரசி; தாய் மருத்துவமனையில் இருக்கும்போது  காதலின் உச்சத்தில் உணர்ச்சியோடு, முழு உள்ளத்தோடு மனோவுடன் ஒன்று சேர்கிறாள். ஆனால் பின்னால் அவனால் நிராகரிக்கப்படும் போது அவள்   மனநிலை என்னவாக இருந்திருக்கும்? எண்ணிப பார்க்கும் போது மனம்பதைக்கிறது.

பூவரசி மீது காதல் கொண்டிருக்கும் தூப்புக்கார தொழிலாளி மாரி, தனது சாதியின் காரணமாக அவளிடம் அதனை வெளிப்படுத்தாமல் இருக்கிறான். இந்தச் சூழலில் மனோ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனால் உருவான குழந்தையைச் சுமந்து நிற்கும்  பூவரசியிடம், நீ விரும்பினால் குழந்தைக்கு நான் அப்பாவாக இருக்கிறேன். உனது விருப்பமின்றி உன்னை தொடமாட்டேன் என்கிறான் மாரி.  அழுக்கு உடலோடு இருக்கும் வெள்ளை மனம் படைத்த வன் மாரி. இதுதான் எளிய மனிதர்களின் உயர்ந்த வாழக்கை என்றார் வேணுகோபால்.

ஆசு-வின் அம்மாக்கள் வாழுந்த தெரு சிறுகதை தொகுப்பை ஆய்வு செய்த சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா, நகரமயமாதலை பெருமையாகப் பேசும் ஆட்சியாளர்கள், கிராமப்புற விவசாயம் அழிவதை பேசுவதில்லை. அதனை ஒரு சிறுகதை பேசுகிறது. கவித்துவமான மொழி நடையால் வசீகரிக்கும் ஆசு, மலைக்கும் மனது இருக்கிறது என்கிறார். மலையையும், காட்டையும் தாயாக பாவிக்கிறார். ஒரு கதையில் இரண்டு சிறுவர்கள் மீன் பிடிப்பதை வைத்து மனித நேயத்தின் உச்சத்தை காட்டுகிறார். இந்த கதை தொகுப்பு நம்பிக்கை விதை வீசுவதாக உள்ளது என்று கூறினார்.


நாவலாசிரியர் மலர்வதி ஏற்புரையற்றுகையில், எனது நாவல் உயிருள்ள இலக்கியம்; கற்பனை அல்ல. இயற்கையை நேசித்து, மனிதர்களை வாசித்து, தோழிகளின் வலி உஷ்ணத்தை உணர்ந்து எழுதிய நாவல் தூப்புக்காரி. இது என்னுடைய வாழ்க்கை அல்ல. பள்ளியில் தூப்புக்காரியாக எனது அம்மா இருந்த போது உருவான ரணம். எதார்த்த வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அசிங்கம், அருவருப்பு என்று பலர் ஓடும் போது அதுவே சிலருக்கு வாழ்க்கையாக உள்ளது. நமது அழுக்கை மற்றொரு இனம் சுத்தம் செய்வதை உடைக்க வேண்டும். 

எனது நாவலைப் படித்து விட்டு கோவையிலிருந்து ஒரு அம்மா பேசினார், கதையில் பிறக்கும் குழந்தையும் தூப்புக்காரியாகிவிடுமா என்று கேட்டார். அதைத் தடுக்கத்தான் நான் இருக்கிறோமே என்று நான் பதில் சொன்னேன். அந்த நம்பிக்கை தான் எனது எழுத்துக்களுக்கு அடிப்படை என்றார். வரதட்சனை கொடுப்பதும், வாங்குவதும் சமூக கௌரவமாக பார்க்கப்படுகிறது. சில மூடநம்பிக்கைகளை மாற்ற வேண்டும்.  மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தில் எனதுபடைப்புகள் அமையும் என்றும் அவர் கூறினார்.


கவிஞர் ஆசு ஏற்புரையாற்றும் போது படைப்புகளாக உருவாக்கிய போது இருந்த மனநிலையை விட விமர்சனங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன என்றார். நிகழ்ச்சிக்கு தமுஎகச தென்சென்னை மாவட்டத் தலைவர் சைதை ஜெ தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு வரவேற்க  துணைச் செயலாளர் சிவசெந்தில் நாதன் நன்றி கூறினார்.