Pages

Thursday, September 16, 2010

தீயில் கருகிய குழந்தைகளுக்கு என்ன செய்தார்கள்?

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டானு ஒரு திரைப்பட காமெடி வரும். அதுபோல எவ்வளவு மிரட்டி கேட்டாலும் மனம் கோணம கொடுத்துடுறானுங்க-னு சொல்லும் அளவுக்கு தனியார் பள்ளி முதலாளிகளால் கட்டணக் கொள்ளை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முழுஅளவிலான சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் போராடின.

இந்த நெருக்கடியால் சமச்சீர்கல்வியையும், கட்டணத்தை முறைப்படுத்த கோவிந்தராஜன் தலைமையிலான ஒரு குழுவையும் அரசு அமைத்து. அந்தக்குழு தனியார் பள்ளிகளை தீர விசாரித்து, ஆராய்ந்து அதன் பிறகு கட்டணத்தை நிர்ணயித்தது. இந்த கட்டணமும் அதிகமாக உள்ளது என்று சகல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு நிர்ணயித்த கட்டணம் கட்டுபடியாகாது என்று கூறி தற்போதும் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வசூல் வேட்டையே நடத்தி வருகின்றன. இதற்கெதிராக ஆங்காங்க பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணம் போதுமானதாக இல்லையென்றால் பள்ளி நிர்வாகம் என்ன செய்திருக்க வேண்டும்?

அ. கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை தகவல் பலகையில் ஒட்டிவிட்டு, அதற்கு அருகில் இந்தக் கட்டணம் போதவில்லை. ஆகவே, இந்த வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நேர்மையாக எழுதி போட்டிருக்க்க வேண்டும்.

ஆ. பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்டி, கடந்த ஆண்டு இவ்வளவு செலவாகி உள்ளது. தற்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்தால், இவ்வளவு தொகை பற்றாக்குறை ஏற்படும். ஆகவே, பெற்றோர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

இ. அரசு நிர்ணயித்த கட்டணம் கட்டுபடியாகவில்லை என்றால் பள்ளியை அரசிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது இழுத்து மூடியிருக்க வேண்டும்.

கல்வி நிலையங்களை கோவிலாக நினைத்த பெற்றோர்கள் பள்ளிகள் வியாபார தலமாக மாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டு, பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை தற்காலிகமாக சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் நீதிமன்றங்கள் தனியார்மயத்திற்கு துணையாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அரசும் வாய்மூடி மவுனியாக தனியார் பள்ளி முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது.

டாமாக் ஊழியர்கள் போராடியபோது மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர், தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று கூற துணிவில்லாமல் போனது ஏன்? முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பள்ளிகள் நடத்தும் போது அவர் அப்படி கூற முடியாதுதான்.

இந்தநிலையில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை நடத்துவதை எதிர்த்து பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளி முன்பு போராட்டம் நடத்துவதை கண்டித்தும், போச்சம்பள்ளியில் உள்ள தனியார்பள்ளி மாணவர் சுரேஷ் விபத்தில் இறந்ததையடுத்து ஏற்பட்ட வன்முறையை கண்டித்தும் மாநிலம் முழுவதும் செப்.17அன்று தனியார் பள்ளிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

தனியார் பள்ளிகளின் வசூல் வெறியால் கும்பகோணத்தில் 100குழந்தைகள் நெருப்பில் வெந்து கருகிய போது இவர்கள் எந்த போராட்டத்தை நடத்தினார்கள். தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றவுடன் இந்த கல்விமான்களும், நியாயவான்களும் தெருவில் இறங்குகிறார்கள். இந்த போராட்டத்தில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

சமூகத்தில் யார் தங்கள் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினாலும் அடக்குமுறையை ஏவும் தமிழக அரசு, பள்ளிகளை மூடும் இவர்களை விட்டுவைப்பதன் மர்மம் என்ன?

Wednesday, September 15, 2010

விஷநீர் அருந்தும் மடிப்பாக்கம் மக்கள்

மடிப்பாக்கம் ஏரி விஷமாக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பருகும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.


சென்னை புறநகர் பகுதியான மடிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது மடிப்பாக்கம் ஏரி. 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது 56ஏக்கராக உள்ளது. மீனம்பாக்கம், நங்கநல்லூர், மூவரசன்பேட்டை, பழைய பல்லாவரம், கீழ்க்கட்டளை போன்ற பகுதிகளில் இருந்து ஏரிக்கு நீர் வருகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை ஏரிக்கு செல்கிறது. தென்மேற்கு பகுதியில் நீர்வெளியேறும் கால்வாய் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பல்லாவரம் நகராட்சி திட்டமிட்டது.  இதனால் ஏரி மாசுபடும் என்று குடியிருப்போர் நலச்சங்கங்கள் தடுத்து நிறுத்தின. நீர் வெளியேறும் கால்வாய் 40 அடியிலிருந்து 10அடியாக சுருங்கி விட்டது. வடகிழக்கு பகுதியும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.


இந்த ஏரியில்21 இடங்களில் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டு 24 நீர் தேக்க தொட்டிகள் மூலமாக ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஏரியை சுற்றி 1.41கோடி செலவில் 18அடி அகல சாலை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டது. பின்னர் அது கைவிடப்பட்டது.


ஏரி ஆக்கிரமிக்கப்படு வதையும், நீர் மாசுபடுவதை தடுக்கவும் 2008ம் ஆண்டு 12லட்சம் ரூபாய் செலவில் ஏரியை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கரையோரம் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த வேலிகள் முற்றிலுமாக சிதைந்து விட்டன.


மடிப்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள சபரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மழை நீர் கால்வாயாக கட்டப்படுகிறது. கழிவு நீர்கால்வாய் தனியாக இல்லாததால், அப்பகுதி மக்கள் மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுகின்றனர். மேலும் வேறுசில தெருக்களில் இருந்து வரும் கழிவு நீரும் இந்த மழைநீர் கால்வாயில் கலக்கிறது. மழைநீர் கால்வாய் என்ற பெயரில் கழிவு நீரை ஏரிக்குள் விட திட்டமிட்டனர். ஏரியை அப்பட்டமாக மாசுபடுத்தும் இந்த முயற்சியை அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தடுத்து நிறுத்தி உள்ளன.

ஏரியை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், ஏரியில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், அந்த அறிவிப்பு பலகையின் கீழே பழைய பல்லாவரத்தில் இருந்து வரும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது.


இதுதொடர்பாக ஏரிக்கு அருகே உள்ள மடிப்பாக்கம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் அன்பழகன் கூறுகையில், பல்லாவரம் நகராட்சியில் மடிப்பாக்கம் ஏரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீரை விடுகின்றனர். இதனால் ஏரி விஷமாக மாறி வருகிறது. இந்த நீரை பருகும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின் றன. இதனை தடுக்க வேண் டிய தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. ஊராட்சியில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லை. ஆகவே பாதாள சாக்கடை அமைப்பதன் மூலமே ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியும். என்கிறார்.


மக்கள் மன்றம் அமைப் பின் அமைப்பாளர் நெ. இல.சீதரன் கூறுகையில், ஏரியை பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைபாதையும் அமைக்க வில்லை, பூங்காவையும் அமைக்க வில்லை. அமைக்கப்பட்ட வேலியும் உடைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், 2007ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதலமைச்சர் மடிப்பாக்கம் ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும் என்றார். ஆனால் இதுவரை அதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார். 
 
 
ஏரி மாசுபடுவதை தடுக்க 25.03.2010 அன்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக் கொடுத்தும் பணிகள் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் சீதரன் கூறினார்.

Tuesday, September 14, 2010

துணைமுதல்வர் தொகுதியில் சிறுநீர் சட்டி சுமக்கும் அவலம்

முன்பெல்லம் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு ஒரு சட்டி கொடுப்பார்கள். அதில்தான் மலமும் சிறுநீரும் கழிக்க வேண்டும். பின்பு அதனை தலையில் தூக்கிச் சென்று கொட்டிவிட்டு வரவேண்டும். அந்த சட்டியோடுதான் இருக்க வேண்டும். அந்த நிலை தற்போதுள்ள சிறைகளில் இல்லை. ஆனால் சென்னை நகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இன்றும் சிறுநீர் சட்டியை சுமக்கும் நிலை உள்ளது. அதுவும் ஆளும் கட்சியான திமுக அலுவலத்திற்கு அருகில், துணை முதலமைச்சரின் ஆயிரம்விளக்கு தொகுதியில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.




1970களில் தேனாம்பேட்டை வெங்கட்ராமன் தெரு குடிசையில் இருந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுப்பதாக அரசு அறிவித்தது. குடியிருப்பு கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக எல்டாம் சாலை ராமலிங்கேவரர் கோவில் அருகே இருந்த காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருக்க அனுமதித்தனர். வீடுகள் கட்டிய பிறகு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. ஆகையால் அந்த மக்கள் அங்கேயே வசித்து வருகின்றனர்.



115வது வட்டத்திற்கு உட்பட்ட இந்த ராமலிங்கேவரர் கோவில் குடிசைபகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள இங்குள்ள மக்கள் வசிக்கும் குடிசை பெரும்பாலும் 80சதுரஅடி அகலம் கொண்டவைதான். இங்குள்ள எந்த குடிசையிலும் கழிப்பிட வசதி இல்லை. இந்தப்பகுதியில் கழிப்பிடம், பாதாள சாக்கடை, குடிநீர்வசதி என எந்த வசதியையும் மாநகராட்சி செய்து கொடுக்காமல் உள்ளது.


ஆகவே, மலம் கழிக்க அரைகிலோமீட்டர் தூரத்தில் உள்ள 113வது வட்டம் போய தெரு பொதுக் கழிப்பிடத்திற்கு செல்கின்றனர். அந்த கழிப்பிடமும் திமுக பிரமுகர் ஒருவரின் வசூல் வேட்டைக்கு உள்ளாகி உள்ளது. அந்த கழிப்பிடத்தையும் காலை 10மணிக்கே மூடிவிட்டு சென்று விடுகிறார்.


கழிப்பிட வசதி இல்லாததால், வீட்டில் உள்ள பக்கெட்டுகளில் சிறுநீர் மற்றும் கழிவு நீரை பிடித்துவந்து பிரதானசாலையில் உள்ள பாதாள சாக்கடையில் ஊற்றிவிட்டு செல்கின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ப சிறைகள் மாறியிருக்கின்றன. ஏழை உழைப்பாளி மக்கள் இன்றும் சிறுநீரை சுமக்கும் கொடுமை இங்கு தொடர்கிறது.


நூறு ரூபாய் செலுத்தினால் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்ததைதொடர்ந்து இப்பகுதியில் உள்ள சிலர் பணம் கட்டினர். ஆனால் இதுவரை இணைப்பு வழங்காமல் உள்ளனர்.



இந்த பகுதி மக்களுக்கு குழாய் அல்லது தொட்டி மூலமாக குடிநீர் வழங்காமல் உள்ளனர். இதனால் எல்டாம் சாலையில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அடித்து எடுத்து செல்கின்றனர். பட்டாக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பட்டா கிடைத்தபாடில்லை.



இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதி மக்கள் 1999ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அதன்பின்னரும் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.



அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி 8வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் 115வது வட்டகிளை செயலாளர் மோகனரங்கன் கூறியுள்ளார்.




இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலை பகுதி பொருளாளர் ரவி கூறுகையில்,இந்த பகுதியின் நுழைவு வாயிலில் திரௌபதி அம்மன் கோவில், பெருமாள் கோவில், ஆஞ்நேயர் கோவில் இருந்தாலும் இந்த மக்களுக்கு அருள் கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களை 25கிமீ தூரத்தில் உள்ள செம்மஞ்சேரிக்கு துரத்திவிட்டு இந்த இடத்தை திமுகவினர் சிலர் அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். அதற்காக எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் உள்ளனர். என்றார்



சூத்திரன் ஆட்சியில் பிரதான சாலைகளில் மட்டும் ஜொலித்தால் போதாது.ஏழை எளிய மக்களின் வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டாமா? மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் எல்லா வசதி வாய்ப்புக்களையும் பெற்று வாழ்ந்திட தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றையும் அளிப்பதே அரசின் குறிக்கோள் என்று முதலமைச்சர் பேசினால் மட்டும்போதுமா?