Pages

Friday, October 22, 2010

கழிப்பறைகளுக்கு மலச்சிக்கல்

சென்னை வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மாநகராட்சி; சுகாதாரத்தில் முன்னிலையில் உள்ளது என்று ஆட்சியாளர்கள் கூறினாலும் கழிப்பிடம் தேடி மக்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று தமிழக முதலமைச்சர் மூச்சுக்கு முன்னூறு முறை உதிர்த்தாலும், தளபதியின் ஆலோசனைக்கிணங்க இந்த அளப்பரிய சாதனையை மாநகராட்சி செய்கிறது என்று மேயர் உணர்ச்சி பொங்க கூறினாலும், பொது சுகாதாரத்தில் மாநகராட்சி பின்தங்கியே உள்ளது. இதுதான் நடைமுறை அனுபவம் உணர்த்துகிறது.

சென்னை மாநகரில் இலவச பொதுக்கழிப்பிடத்தை காண்பதே அரிதாக உள்ளது. ஆங்காங்கே ஒன்றிரண்டு பொதுக்கழிப்பிடங்கள் இருந்தாலும் அது ஆளும் கட்சியினரின் வசூல் வேட்டைக்கே பயன்படுகிறது. பொதுச்சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டிய மாநகராட்சி, மக்களின் நலனில், குறிப்பாக குடிசைபகுதி மக்களின் நலனில் அக்கறை இன்றி உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக சில கழிப்பிடங்கள் சாட்சிகளாக உள்ளன.

முதலமைச்சர் தொகுதியே இந்த லட்சணம் என்றால்?

சேப்பாக்கம் தொகுதி. முதலமைச்சரின் தொகுதி. பிற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தொகுதி. நிலைமை என்ன? 81வது வட்டம் சிந்தாதரிப்பேட்டை பம்பிங் டேசன் சாலை, ரிச்சி தெருவில் 300குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகம் எதிரில் நவீன பொதுக்கழிப்பிடம் உள்ளது. பெயர்தான் நவீனமே தவிர, கழிப்பிடம் கட்டி பல வருடங்களாகிறது. அந்த கழிப்பிடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல மாதங்களாகிறது.

கழிப்பிடத்தை பராமரிக்க ஊழியர்கள் இல்லை. உடைந்த கழிவு நீர் குழாய்களை சரி செய்ய மாநகராட்சிக்கு மனம் இல்லை. கழிப்பிடம் முற்றிலும் நாசமாகி விட்டது. ஆகவே, கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பூட்டியே கிடக்கும் அந்த கழிப்பிடத்தின் பெயர் பலகை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.

துணை முதலமைச்சர் திறந்தும் மூடியே கிடக்கும் கழிப்பிடம்

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 107வது வட்டம், நுங்கம்பாக்கம் மைதானத்தில் 5லட்சம் ரூபாய் செலவில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அதனை துணை முதலமைச்சர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்தும் வைத்தார். அன்றிலிருந்து அந்த கழிப்பிடத்தை பாதுகாப்பாக மாநகராட்சி பூட்டி வைத்துள்ளது.

இது தெரியாமல், மைதானத்திற்கு விளையாட வருகிறவர்கள் போக இடமின்றி கழிப்பிடத்தை உடைத்து பயன்படுத்தினர். பராமரிப்பு இல்லாததால் பயனற்று கிடக்கும் அந்த கழிப்பிடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இளைஞர்கள் பயனடைவார்கள். பெண்கள் கழிப்பிடத்தை யாரும் உடைக்கவில்லை என்பதுதான் இந்த கழிப்பிடத்தின் சிறப்பு.

பூச்சி கடித்தால் என்ன?

139வது வட்டம் ஜோதியம்மாள் நகரில் 75விழுக்காடு குடும்பங்களுக்கு கழிப்பிடம் இல்லை. இவர்களுக்காக 2002-2003ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பிடமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதுகாப்பாக மூடியே வைக்கப்பட்டுள்ளது.

கழிப்பிட வசதி இல்லாத மக்கள், அடையாற்று கரையும், புதர்மண்டிய மைதானமும் கழிப்பிடமாக இருந்து வருகிறது. அங்கு செல்லும் மக்கள் அவ்வப்போது பூச்சிகடிகளுக்கு உள்ளாகின்றனர்.

நடவடிக்கை?

இந்த கழிப்பிடங்களை திறக்கக்கோரி அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர். பத்திரிகைகளில் அவ்வப்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொகுதி குறித்து செய்தி வெளியிட்டால், மாநகராட்சி அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பது போன்று பாவலா காட்டுகிறது. இதுதான் சிறப்பாக செயல்படும் மாநகராட்சியின் லட்சனமாக உள்ளது.

ஒருவேளை அந்த பெரியவர்கள் அங்கு செல்லாததால் பூட்டி பாதுகாப்பாக வைத்துள்ளார்களோ? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மனிதனுக்கு மலச்சிக்கல் வந்தால் மருத்துவரிடம் செல்லலாம். கழிப்பிடத்திற்கு மலச்சிக்கல் வந்தால் மாநகராட்சிதானே சரி செய்ய வேண்டும்.

No comments: