Pages

Friday, December 10, 2010

தியாகியை அவமதிக்கலாமா?




குரோம்பேட்டை பாரதி புரத்தில் மூடப்பட்டுள்ள பரலி சு.நெல்லையப்பர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருநெல்வேலிக்கு அருகே பரலிக்கோட்டை என்ற சிற்றூரில் 1889-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி பிறந்த பரலி சு. நெல்லையப்பர் (உள்படம்), வ.உ.சி., பாரதியார், வ.வே.சு. ஐயர் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போரில் தீவிரமாக பங்கேற்றார். இதனால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.


தம்பி எனப் பாரதியாரால் அழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பர், எளிய தமிழில் எழுதும் ஆற்றல் கொண்டவர். சிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்து, தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். பாரதியின் பல படைப்புகளைச் சிறு நூல்களாக அச்சிட்டு மக்களிடையே கொண்டு சென்றார். சென்னை குரோம்பேட்டை பாரதி புரத்தில் வாழ்ந்து வந்த நெல்லையப்பர் 1971-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி காலமானார்.


தன்னுடைய மறைவுக்கு பிறகு தான் வாழ்ந்த இடத்தில் பள்ளி தொடங்க வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்தார். அந்த இடத்தை தானமாக பெற்று அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.


பல்லாவரம் நகராட்சி யாக அந்த பகுதி மாறிய போது, அந்தப்பள்ளி நகராட்சியிடம் ஒப்படைக் கப்பட்டது. அப்பள்ளிக்கு பரலி சு.நெல்லையப்பர் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பள்ளியால் பாரதிபுரம், ராதாநகர், புருஷோத்தமன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைந்தனர்.


இப்பகுதியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் காரணமாகவும், நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தாதன் காரணமாகவும் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதனைக்காரணம் காட்டி 2003ம் ஆண்டு பள்ளி மூடப்பட்டது. அன்று முதல் பள்ளி பூட்டியே கிடக்கிறது.


பரலி சு.நெல்லையப்பர் என்ற தியாகி வாழ்ந்த அந்த இடம் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாகவும், கழிப்பிடமாகவும் மாறி உள்ளது. இந்தப் பள்ளி மூடப்பட்டுள்ள தால், ஏழை எளிய குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு பள்ளியை நோக்கிச் செல்கின்றனர்.


ஆகவே, இந்தப்பள்ளியை திறக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து நகராட்சியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.நரசிம்மன் பல முறை நகர்மன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளார். ஆனாலும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.


அந்தப்பள்ளியை மீண் டும் பள்ளியாக தொடர்ந்து நடதுவதுதான்  விடுதலைப் போராட்ட தியாகிக்கு அளிக்கும் மரியாதையாகவும், மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இக்கும். இந்தப்பள்ளியை தொடர்ந்து நடத்த நகராட்சியும், தமிழக அரசும் முன்வருமா?

1 comment:

THE STUDENT MAGAZINE said...

gud story nanba.. worth following up and the school should be reopened. will try