Pages

Monday, January 28, 2013


விவசாயிகளும், தொழிலாளர்களும் தரும் ஆதரவுதான் மிகச்சிறந்த பாராட்டு
- செல்வராஜ்



இடதுசாரி எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கும் போது வழக்கம்போல் எழும் தரமற்ற விமர்சனங்களுக்கு தோல் நாவலும் தப்பவில்லை. கம்யூனிஸ்ட்டு கள் வர்க்கப் போராட்டத்தையும், சாதிப் போராட்டத்தையும் ஒருசேர நடத்தியதால் கிடைத்த வெற்றி, அதனால் உரு வான சமூக மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களின் விமர்சனங்களை புறந்தள்ளி இடதுசாரி இயக்க எழுத்தாளர்கள் புதிய புதிய படைப்புகளை தந்து கொண்டிருக்கின்றனர். இலக்கிய உலகில் புதிய தடம் பதித்து வலம் வருகின்றனர்.


இடதுசாரி எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்பை புறக்கணிக்க முடியாத நிலையிலேயே இத்தகைய விருதுகள் அவர்களை நோக்கி வருகின்றன. இதற்கு மணிமகுடமாக, தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் டி.செல்வராஜின் தோல் நாவல், 2012ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள நூல்களின் வரிசையில் 3வதாக சாகித்ய அகாடமி விருது பெறுகிற நூல் என்பது குறிப்பிட்டத்தக்கது.


இதனையொட்டி 36வது சென்னை புத்தகக்காட்சி வளாகத்தில் டி.செல்வராஜூக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நூலை அறிமுகம் செய்த மதுரை காந்திகிராம் கிராமியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், "38 ஆண்டுகால அரசியல், சமூக, பொருளதார வரலாறு விரிவாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் எத்தகைய இன்னலுக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள் என்ப தையும், பரம்பரை அடிமையாக தோல் ஷாப்புகளில் பணியாற்றுவதையும் இது பதிவு செய்துள்ளது" என்றார்.


"கம்யூனிஸ்ட் இயக்கத்தவர் தலைமறைவு காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்த பதிவு தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவாக உள்ளது. அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களோடு மக்களாக கலந்து நின்று, சங்கத்தை ஏற்படுத்தி சிட்டுக்குருவிகளாக இருந்த தொழிலாளர்களை வல்லூறுகளாக மாற்றினார்கள் என்பதை மிகவும் நுட்பமாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சோசலிச எதார்த்த நாவல்" என்றார் அவர்.


"இடதுசாரிகளுக்கு விருது கிடைத்தாலே அது விமர்சனத்திற்குள்ளாகிறது. அதற்கேற்ப இடதுசாரிகள் தொடர்ந்து விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இடதுசாரி அமைப்புகளை தவிர்த்து வேறு அமைப்புகளில் எழுத்தாளர்கள் இல்லை. தேசிய, திராவிட இயக்கங்களுக்கு புதிதாக எழுத்தாளர்களை உருவாக்கும் சக்தி இல்லை; குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கின்ற ஒன்றிரண்டு எழுத்தாளர்களும் பழைய எழுத்தாளர்கள். புதிதாக சில கவிஞர்கள் இருக்கிறார்கள் அவ்வளவுதான். 50 வருட கால தொடர் போராட்டத்தினால் மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் விஞ்சும் வகையில் இடதுசாரி இயக்கம் தமிழகத்தில் புதிய நாவலாசிரியர்களை, சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை, படைப்பாளிகளை உருவாக்கி உள்ளது; உருவாக்கி வருகி றது. இதனை நிராகரிக்க முடியாமல் இடதுசாரி எழுத்தாளர்களை நோக்கி விருதுகள் வருகின்றன," என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத் தின் துணைத்தலைவர் சிகரம் ச.செந் தில்நாதன் பெருமிதத்தோடு கூறினார்.


"தோல் நாவல் இலக்கியம் இல்லையென்றால் எது இலக்கியம்? உண்மை களை எழுதினால் அது இலக்கியமில்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ் இலக்கியம் அனைத்துமே பிரச்சார வகை சார்ந்ததுதான். கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவையும் பிரச்சார இலக்கியம்தான். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை படைப்புகள் பிரச்சார வகை சார்ந்ததுதான். படைப்பு வெறும் பிரச்சாரமாக இல்லாமல், அது கலைவடி வம் பெற்றுள்ளதா?" என்றுதான் பார்க்க வேண்டும், என்றார்.


"வர்க்க அரசியலை பற்றி பேசுகிற இடதுசாரி படைப்பாளிகளுக்கு அழகியல் வேறு, அதனை எதிர்ப்பவர்களுக்கு உள்ள அழகியல் வேறு. நாவலின் முடிவில் பிராமணனான சங்கரன், வேறு சாதிப்பெண்ணான வடிவாம்பாளை திருமணம் செய்து கொள்வதோடு நாவலை முடித்திருக்கலாம். மாறாக, திருமணம் முடிந்த கையோடு சங்கரன் கைது செய்யப்படுகிறான். வடி வாம்பாளை சங்கரனின் தாயார் அணைத்துக் கொள்கிறாள். இதுதான் மார்க்சிய அழகியல். இது ஜெயமோகன் கும்பலுக்கு தெரியாது." என்றார் செந்தில்நாதன்.


சென்னை பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவர் பேரா.வீ.அரசு, "தமிழ்ப் புனைகதை வரலாற்றில் மிகச்சிறந்த நூல்களை டி.செல்வராஜ் படைத்துள் ளார் என்று புகழாரம் சூட்டினார். தமிழ் நாவல்களை பட்டியலிட்டால் அதில் வளமானதாக இடதுசாரி எழுத்தாளர்களின் நாவல்கள் இருக்கும். இடதுசாரி படைப்பாளிகள் உருவாக்கி வரும் புனைகதை மரபு முற்றிலும் வேறானதாக இருக்கிறது. தொ.மு.சி.ரகுநாதன் தனது நாவலுக்கு நெசவு தொழிலாளியை தேர்ந்தெடுத்தது சாதாரண நிகழ்வல்ல. அதே போன்று இடதுசாரிகள் தோல் தொழிலாளர்களுடன் கொண்டிருந்த ஆத்மார்த்தமான உறவு முதன்முதலில் நாவலாக வந்துள்ளது. விவசாய தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்த மலரும் சருகும் நாவலுக்கு சற்றும் குறைவு இல்லாமல் தோல் நாவல் வந்துள்ளது" என்றார்.


"இந்த நாவல் தோல் தொழிலாளர் களை பற்றி மட்டுமே பேசுகிறது. சாதியாக வாழும் மக்கள் வர்க்கமாக திரள்கிறார்கள். மத வேறுபாடுகளை கடந்து நிற் கிறார்கள். ஒடுக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பெண்களின் வெளிப்பாடுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். சாதியம் சார்ந்த கருத்து முன் நிற்கிறதா? வர்க்கம் சார்ந்த கருத்து முன் நிற்கிறதா? என்று விவாதிக்க வேண்டும். புதிய புனைவுகளையும், போராளிகளையும் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று உணர்ந்து பதிவு செய்திருக்கிறார்" என்றும் வீ.அரசு கூறி னார்.


"கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கமும் சாதியும் இணைந்த புள்ளியில் நடத்திய போராட்டங்கள்தான் வெற்றியை பெற்றுத் தந்துள்ளன என்று குறிப்பிட்ட ஆய்வாளர் வ.கீதா நாவல் ஏற்படுத்தியுள்ள காத்திரமான விளைவுகளையும், கனமான விமர்சனங்களையும் முன்வைத்தார். "இந்திய சுதந்திரத்தின் மாய்மாலங்களை வெளிப்படுத்துவதாக இந்த நாவலை நாம் பார்க்கலாம். ஹரிஜன சேவாசங்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றை அணைத்துக் கொண்டு சென்ற தன்மையை இதில் காண முடிகிறது. இந்தப் புதினத்தில் வரும் கிருத்தவர்கள் உயிர்த் தெழுதல் தத்துவத்தையும், கம்யூனிச தத்துவத்தையும் இணைத்துக் கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் மத உணர்வு வேறு; திருச்சபை பணியாளர்களின் மனநிலை வேறு என்பதை இந்நா வல் தெளிவுபடுத்துகிறது," என்றும் அவர் கூறினார்.


"ஓசேப்பு என்றபாத்திரம் ஒரு கழிப் பறையில் ஒளிந்து கொள்கிறான். அதனை ஒரு பன்றியும் பகிர்ந்து கொள்கிறது என்ற நாவலின் பகுதி மலம், அழுக்கு என்ப தன் மீதான கருத்தியல் என்ன? இவற் றோடு உழலும் மக்களின வாழ்க்கை முறை என்ன என்பதைப் புதினம் கட்டுகிறது. இந்த நாவலின் பெண் பாத்திரங்கள் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டி யவை. ஒருவனால் ஏமாற்றப்பட்டு குழந் தைக்குத் தாயும் ஆன ஒரு பெண் இன் னொருவனோடு வாழ்க்கை நடத்துவது போன்ற பாத்திரப் படைப்பிலும் பெண்க ளின் மாண்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் நாவலாசிரியர் டி. செல்வராஜ்" என்று வ.கீதா புகழ்ந்துரைத்தார்.


"தொழிற்சங்கங்கள் வெறும் கூலி உயர்வுக்காக மட்டும் போராடுபவை அல்ல; சமூக மாற்றத்திற்கான போராட்டத்தையும் நடத்தக் கூடியவை. தோல் நாவலில் வரும் பாத்திரங்கள் கற்பனையானவை அல்ல. உயிரோடு வாழ்ந்து, மக்களோடு இணைந்து நின்ற களப்போராளிகள். தோல் பதனிடும் தொழிலாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்தார்கள், எத்தகைய சுரண்டலுக்கு உள்ளானார்கள் என்பதை இந்நாவலின் வழியாக வாசகர்கள் உணர முடியும். இது திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறாக இல்லாமல் தமிழகத்தின் வரலாறாகவும் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உரு வான தொழிலாளர் ஒற்றுமை ஒட்டு மொத்த சமூகத்திலும் மாற்றத்தை உரு வாக்கியது" என்று இந்திய கம்யூனிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவருமான ஆர்.நல்லகண்ணு கூறினார்.


"என்ன சாதி, எந்த பிரிவு என்றெல் லாம் கேட்கிறார்கள். இதனை கேட்கவே வெட்கமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் அதை வெளியே சொல்வதில்லை. பெருமைப்பட்டுக் கொள்வதுமில்லை. அது சமூக மாற்றத்திற்கானது என்று செய்கிறார்கள். தற்போதைய சூழலில் வேறுவழியின்றி சொல்கிறேன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, நான் உட்பட பெரும்பாலானோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வர்கள்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் தேவர் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெண்ணைத்தான், தலித்தான டி.செல்வ ராஜூக்கு பேசி திருமணம் செய்து வைத் தோம். அவர்கள் நன்றாகத்தான் வாழ்கி றார்கள். நாங்களும் நன்றாகத்தான் உள் ளோம்.  கட்டாயப்படுத்தி திருமணம் செய் வது தவறு; காதலிப்பவர்களின் திரும ணத்தைத் தடுத்து நிறுத்த எவருக்கும் உரிமை கிடையாது." என்றும் நல்லகண்ணு கூறினார்.


ஏற்புரை நிகழ்த்திய டி.செல்வராஜ், "60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதுவதை யாரும் பிரசுரிக்க மாட்டார்கள். நவீனத்து வம், பின் நவீனத்துவம் என புதுசுபுதுசாக சொல்கிறார்கள். மக்களுக்கு பயன்படாத அதெல்லாம் சமூகத்தில் நிற்காது, என் றார். தமிழக அரசின் விருதையும், சாகித்ய அகாடமியின் விருதையும் ஒருசேர பெற்ற தோல் நாவல் குறித்து அவர் பேசு கையில், பரிசுக்காக நாவல் எழுத வில்லை. எனது அரசியல் கருத்தை நிலை நாட்டத்தான் எழுதினேன். பரிசு வேண் டுமென்று நினைத்திருந்தால் சாமியார் காலிலோ அல்லது அரசியல்வாதிகளின் காலிலோ சென்று விழுந்திருப்பேன். சமூகத்தை மாற்ற போராடும் விவசாயிகளும், தொழிலாளர்களும் தரும் ஆதரவுதான் மிகச்சிறந்த பரிசு" என்றார்.


"முற்போக்கு எழுத்தாளர்கள் நடத் திய 60ஆண்டு கால போராட்டத்தின் விளைவாகத்தான் தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள் ளது. பல இளம் எழுத்தாளர்கள் இடது சாரி முகாமில் எழுதுகின்றனர். ஒடுக்கப் பட்ட இஸ்லாமியர்கள், பெண்கள் பற்றி அதிக அளவில் எழுதுகிறார்கள். அடுத்த டுத்து வரவிருக்கிற விருதுகள் அனைத் தும் முற்போக்கு முகாமை நோக்கியே வரும். அந்த அளவுக்கு சிறந்த படைப்பு கள் வந்து கொண்டிருக்கின்றன" என்றார் செல்வராஜ்.

தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு விரைவாக நகர்த்திச் செல்லும் பணியை இடதுசாரி எழுத்தாளர்கள் தொடங்கி, தற்போது அதனை அதிவேகத்தில் செய்து வருகின்றனர் என்பதையும் இந்நிகழ்வு பறைசாற்றியது.

No comments: