Pages

Sunday, July 29, 2012

வேளச்சேரி தொகுதி : புதிதாக 182 ரேசன் கடை தேவை


வேளச்சேரி தொகுதி : புதிதாக 182 ரேசன் கடை தேவை
பாதி குடும்பங்களுக்கு மறுக்கப்படும் மண்ணெண்ணை

முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் என எல்லோரும தட்டுப்பாடின்றி அனைத்து மக்களுக்கும் ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்கிறது என்றுதான் கூறுகிறார்கள். உண்மை நிலை என்னவோ அதற்கு மாறாகவே இருக்கிறது. வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 50 விழுக்காடு குடும்ப அட்டைகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே மண்ணெண்ணை வழங்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழக அரசு ரேசன் கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணை ஒதுக்காததே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உணவு பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் இயக்கம் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கட்சி அந்தக் காரணத்தைக் கண்டறிந்துள்ளது. வேளச்சேரி தொகுதியில் உள்ள 55 கடைகளில் 35 கடைகளில் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

வேளச்சேரி தொகுதியில் 55 ரேசன் கடைகளில் ஒரு லட்சத்து 90ஆயிரத்து 271 குடும்ப அட்டைகள் உள்ளன. சராசரியாக ஒரு கடைக்கு 3,500 குடும்ப அட்டைகள் உள்ளன. கடைக்கு 4 ஊழியர் இருந்த நிலை மாறி தற்போது கடைக்கு ஒரு ஊழியரே உள்ளார். இதனால் பொதுமக்கள் பொருட்களை பெற்றுச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு கடைக்கு ஒரு ஊழியர் இருப்பதால், உதவிக்கு ஒருவரை அவரே நியமித்துக் கொள்கிறார். அவருக்கு ஊதியம் தர வேண்டி உள்ளது.

ரேசன் கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை, பாமாயில், பருப்பு உள்ளிட்டவை ஒதுக்கப்படுவதில்லை. தேவையில் 60-80விழுக்காடு வரையே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு கடைக்கும் மண்ணெண்ணை 50 விழுக்காடு அளவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே மண்ணெண்ணை கிடைக்கிறது. பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாதத்தின் முதல் வாரத்தில் செல்கிறவர்களுக்கு மட்டுமே அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு தரமணி ஐசிஓ-15 கடையில் 2,642 குடும்ப அட்டைக்கு 5,300 லிட்டர் மண்ணெண்ணை ஒதுக்கப்படுகிறது. ஐசிஓ-16 என்ற கடையில் 1,621 அட்டைக்கு 3,100லிட்டர் மண்ணெண்ணையே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அபராதம், எடை குறைவாக வழங்குதல், குறைவான பொருட்களை ஒதுக்கீடு செய்தல், ஏற்றுக் கூலி, இறக்குகூலி என ஊழியர்கள் செலவிட வேண்டி இருப்பதால், மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்கின்றனர். பருப்பு வழங்காமலே வழங்கியதாக அட்டையில் பதிவிட்டு முறைகேடு செய்கின்றனர்.

தரமணியில் உள்ள ஒரே வளாகத்தில் இரண்டு கடைகள் உள்ளன. அங்கு 4,263 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த கடைகளை நான்காக பிரித்து புதிய கடை உருவாக்க புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு 6 மாதமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. மற்றொரு கடை 6 அடி பள்ளத்தில் உள்ளது. அந்த கடைக்கு செல்கிற மக்கள் முட்டிப்போட்டுக் கொண்டுதான் பொருட்களை வாங்க வேண்டும். எனவே இந்தக் கடைக்கு புதிய கட்டிடம் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலை குறித்து  பேசிய சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி வேளச்சேரி பகுதியில் மக்கள் அடர்வு அதிகமாக உள்ளது. இதனால் ஒரு ரேசன் கடையில் 4,000 கார்டுகளுக்கும் அதிகமாக உள்ளன. புதிதாக ரேசன் கடைகள் அமைக்க தேவை இருந்தும் அரசு அதனை செய்ய மறுக்கிறது. 800 குடும்ப அட்டைக்கு ஒரு கடை என்ற அரசின் அறிவிப்புப்படி 237 கடைகள் இருக்க வேண்டும். ஆனால் 55 கடைகள்தான் உள்ளன. எனவே, அரசு மக்களின் சிரமத்தை உணர்ந்து புதிய கடைகளை அமைக்க வேண்டும் என்கிறார்.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  இலவச அரிசி தரமற்றதாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அளவு குறைவாகவும் வழங்கப்படுகிறது அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மின்தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விடுகின்றனர். அவ்வாறு செய்வதை கைவிட வேண்டும். பெசன்ட்நகர் ஆல்காட் குப்பத்தில் உள்ள மக்கள் திருவான்மியூர் வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையை மாற்றி, ஆல்காட் குப்பத்திலேயே ரேசன் கடை அமைக்க வேண்டும். என்றும் அவர் கூறுகிறார்.

No comments: