Pages

Sunday, July 29, 2012

சோழிங்கநல்லூர் தொகுதி: மண்ணெண்ணைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்




நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணை தாராளமாகக் கிடைக்கிறது என அரசு வட்டாரங்கள்  சொல்லிக் கொள்கின்றன. சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பதை ஒரு ஆய்வு அம்பலபடுத்துகிறது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா எனப்படும் சோழிங்கநல்லூர் தொகுதியில் ரேசன் கடைகளின் நிலைமை குறித்து மார்கசிஸ்ட் கட்சி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்விலிருந்து தெரியவரும் உண்மைகள் இவை:

சென்னை மாநகராட்சியின் 20 வார்டுகள், 7ஊராட்சிகளை உள்ளடக்கிய சோழிங்கநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய 108 கடைகள் உள்ளன. இவற்றில் 45 கடைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த தொகுதி முழுவதும் 28 விழுக்காடு அளவுக்கு மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழக அரசின் அறிவிப்புப்படி 800 கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை வீதம் 163 கடைகள் இருக்க வேண்டும். ஆனால், 108 கடைகளே உள்ளன. இதனால் ரேசன் கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் அமைக்க தெருத்தெருவாக அலைந்து இடம் கண்டுபிடிக்கும் அதிகாரிகள், மக்கள் விரும்பும் இடங்களில் ரேசன் கடை அமைக்க இடம் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். பெருங்குடி, கண்ணகி நகர் மக்களில் பெரும் பகுதியினர் மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்.

அப்பகுதிகளில் 7 ரேசன் கடைகள் உள்ளன.  இந்த கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணையில் 72விழுக்காடு அளவிற்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் 28விழுக்காடு கார்டுகளுக்கு மண்ணெண்ணை கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட இதே நிலைதான் அனைத்து பகுதிகளிலும்.
தொகுதியில் தேவையான எண்ணிக்கையில் ரேசன் கடைகள் இல்லாததும், தற்போதுள்ள கடைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதன் காரணமாகும்.

துரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்டு தொகுதி முழுவதுமே ரேசன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை, கிடைத்தாலும் எடை குறைவாக உள்ளது என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் டி.ராமன், தமிழக அரசு ரேசன் கடைகளில் உள்ள கார்டுகளுக்கு தேவையான அளவு மண்ணெண்ணையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். எடை குறைவாக ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ஊழியர்களும் எடை குறைவாகவே பொருட்களை வழங்குகின்றனர். ஊழியர் பற்றாக்குறையையும் நிலவுகிறது. இவற்றை சரி செய்ய வேண்டும். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக 55 ரேசன் கடைகளை திறக்க வேண்டும், என்றார்.

ஒக்கியம் பேட்டையில் 1200 கார்டுகள் உள்ளன. அங்குள்ள மக்கள் ராஜீவ்காந்தி சாலையை கடந்து சென்று பொருட்களை வாங்கி வர வேண்டி உள்ளது. எனவே, மூட்டைக்காரன் சாவடியில் (நேருநகர்) புதிய கடை அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் இரண்டு கடைகள் அருகருகே உள்ளன. அவற்றை கிழக்கு பகுதிக்கு ஒன்று, மேற்கு பகுதிக்கு ஒன்று என பிரித்து அமைக்க வேண்டும், என்றார் அவர்.

பெருங்குடியில் உள்ள 6 கடைகளில் 5 கடைகளை கல்லுகுட்டை பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கடைகளுக்கு செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே, திருவள்ளுவர் நகரில் புதிதாக ஒரு கடை அமைக்க வேண்டும். மேடவாக்கம் ஊராட்சி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் 15 கடைகள் உள்ளன. இந்தப்பகுதியில் உடனடியாக 800 கார்டுக்கு ஒரு ரேசன் கடை அமைக்க வேண்டும் என்றும் ராமன் வலியுறுத்துகிறார்.

4000 பேருக்கு ரேசன் கார்டு இல்லை

சென்னை நகர குடிசை பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கண்ணகிநகரில் குடியமர்த்தப்படுகின்றனர். தற்போது கண்ணகி நகரில் 17 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் 7 உள்ள கடைகளில்  13,000 குடும்ப அட்டைகள் உள்ளன. அதேநேரத்தில், 4,000 குடும்பங்கன் ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தும் ஏனோ அதிகாரிகள் இன்னமும் வழங்காமல் உள்ளனர்.

No comments: